அலுவலக வாசலிலேயே தூக்கில் தொங்க தயார் - டிஎஸ்பி பரபரப்பு பேட்டி
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, உளவுப்பிரிவு ஐஜி ஆகியோர் மீது விசாரணை தேவை மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.

நடந்து பணிக்கு சென்ற டிஎஸ்பி
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் என்பவரது வாகனத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அமைச்சர் மெய்யநாதனின் விஐபி பாதுகாப்பு பணிக்கு மாற்றிவிட்டு, பழுதடைந்த வாகனத்தை கொடுத்ததாகவும், அந்த வாகனம் தனக்கு தேவையில்லை என்று கூறி டிஎஸ்பி சுந்தரேசன் மீண்டும் காவல்துறையில் ஒப்படைத்துவிட்டு பணிகளை தொடர்ந்ததாகவும், இந்நிலையில் இன்று வழக்கமான பணிகளை கவணிக்க வீட்டிலிருந்து நடந்து வந்துள்ளார்.

ஏடிஜிபி, ஐஜி தூண்டுதலின் பேரில் டார்ச்சர்
இது குறித்த வீடியோ ஊடகங்களில் செய்தியாகி வைரல் ஆன நிலையில், காஞ்சிபுரம் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்தூரி கொலை வழக்கில் தனது விசாரணை அறிக்கையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் உளவுத்துறை ஐஜி செந்தில்வேல் ஆகியோர் தூண்டுதல் பெயரில் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு மனரீதியாக தன்னை டார்ச்சர் செய்வதாக பரபரப்பு குற்றம் சாட்டை தெரிவித்தார்.

அலுவலக வாசலிலேயே தூக்கில் தொங்க தயார்
மேலும் நேர்மையான போலீஸ் அதிகாரியான தனக்கு நான்கு மாதம் சம்பளம் வழங்கப்படாத நிலையில், தான் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால், நான் ஓய்வூதியம் பெறக்கூடாது என்பதற்காக சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நான் லஞ்சமாக ஏசி வாங்கியதாக கூறுகின்றனர். தான் லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் அலுவலக வாசலிலேயே தூக்கில் தொங்க தயார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தனக்கு தனது உயிர் முக்கியம் இல்லை என்றும், ஆனால் தனது குடும்பத்திற்கு தன்உயிர் முக்கியம் எனவும், வளைந்து செல்லாவிட்டால் ஒடிக்கப்படுவீர்கள் என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தனக்கு சைகை காட்டியதாகவும், லஞ்சம் ஊழல் இவற்றில் இருக்கும் அதிகாரிகளுக்கு வசூல் செய்யாத நேர்மையான காவல்துறையினர் பழிவாங்கப்படுவார்கள்.

காவல் துறை யாருக்கு பாதுகாப்பு இல்லை
தான் தன்னிச்சையாக பேட்டியளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்ட் செய்யப்படுவேன் என்றும் தெரிந்துதான் இந்த பேட்டி அளிப்பதாகவும், சிறப்பு தனிப்படை பிரிவை வைத்து உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் மூலம் பணம் வாங்கப்படுகிறது. அதிகாரிகள் செய்யும் தவறுக்கு காவல் துறையினர் பாதிக்கப்படுகின்றனர். இங்கு போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லை, காவல்துறைக்கும் பாதுகாப்பு இல்லை என டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

மறுப்பு தெரிவித்த எஸ்.பி
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், மயிலாடுதுறை காவல்துறை சார்பில் இதற்கு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவிக்கையில், மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசனின் வாகனம் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் கையாளப்பட்டுள்ளது, அவர் மீது என்ன விதமான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது விசாரணைக்கு பின்னே தெரியவரும் என்றும், லஞ்சம் ஊழல் எதுவும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இல்லை அவர் தவறான தகவலை கூறி வருகிறார் என தெரிவிக்கிறார் என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.





















