காஞ்சிபுரம் கொள்ளை: 4.5 கோடி வழிப்பறி வழக்கில் 5 கேரள இளைஞர்கள் கைது! அதிர்ச்சி தகவல்!
"காஞ்சிபுரம் அருகே 4.5 கோடி ரூபாய் வழிப்பறி வழக்கு 5 கேரளா இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்"

காஞ்சிபுரம் அருகே நான்கரை கோடி ரூபாயை காருடன் கடத்தி வழிப்பறி செய்த 5 கேரள இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிப்பட்ட குற்றவாளிகளை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஸ்டடியில் எடுத்து, கேரளா அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் 10 பேரை பிடிக்கவும், நான்கரை கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றவும் தனிப்படையினர் கேரளாக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொள்ளைச் சம்பவம்
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே, போரிவலி பகுதியைச் சேர்ந்தவர் ஜாடின், 56. இவர், தன் சகோதரருடன் சேர்ந்து, 2017ல் இருந்து, கூரியர் நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் வாயிலாக, 'கமிஷன்' அடிப்படையில் நாடு முழுதும் பணம் மற்றும் பொருட்களை அனுப்பி வருகிறார்.
கடந்த ஆக., 20ம் தேதி, 'ஹூண்டாய் கிரெட்டா' காரில் உள்ள லாக்கரில், 4.5 கோடி ரூபாயை வைத்து, தங்கள் நிறுவனத்தின் ஓட்டுநர்கள் பியூஷ்குமார், தேவேந்திர படேல் ஆகியோரை, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, சென்னை சவுகார்பேட்டைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பணத்துடன் தப்பி ஓட்டம்
இரு மாதங்களுக்கு முன் இந்த கார் காஞ்சிபுரம், ஆட்டுப் புத்துார் அருகே வந்தபோது, மூன்று கார்களில் வந்த மர்ம நபர்கள், பியூஷ்குமார் மற்றும் தேவேந்திர படேல் சென்ற காரை மடக்கினர். கத்தி முனையில், பணத்துடன் காரை கடத்தினர். ஆற்காடு அருகே சென்ற போது, பணத்தை கொள்ளையடித்து விட்டு, அந்த காரை அங்கேயே விட்டுச் சென்றனர். ஓட்டுநர்கள் பியூஷ்குமார், தேவேந்திர படேல் ஆகியோரையும், அங்கேயே இறக்கிவிட்டு தப்பினர்.
இச்சம்பவம் குறித்து, மும்பையில் இருந்த தங்கள் நிறுவன உரிமையாளர் ஜாடினிடம், இருவரும் தகவல் தெரிவித்தனர். அதன்படி, ஜாடின் காஞ்சிபுரம் வந்து, பொன்னேரிக்கரை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். எஸ்.பி., சண்முகம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் கைவ ரசை காட்டியது தெரிந்தது.
கேரளாவில் காவல்துறையினர் முகாம்
இதையடுத்து, சில நாட்களுக்கு முன், தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று, அம்மாநிலத்தில் உள்ள பாலக்காடு, கொல்லம், திருச்சூர் மாவட்டங்களைச் சேர்ந்த சந்தோஷ், 42, சுஜிலால், 36, உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் மேலும் 10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க, இன்ஸ்பெக்டர்கள் தனிப்படை போலீசார், கேரள மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.





















