தற்கொலை செய்ய தடையாக இருந்த மனைவி.. தீவைத்து கொளுத்திய கணவன்..
தன்னுடைய தற்கொலை முடிவை தடுத்து தனக்கு இடையூறாக இருக்கும் மனைவியைக் கொன்று பின்னர் தற்கொலை செய்துக்கொள்ள நாகபூஷண் விபரீத முடிவு செய்தார்.

தெலங்கானாவில் தனது தற்கொலை முடிவுக்கு மனைவி தொடர்ந்து தடையாக இருந்ததால் கணவர் செய்த விபரீத காரியம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தெலங்கானாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்மம் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள திருமலையபாலம் பகுதியில் நாகபூஷணம் என்பவர் தனது மனைவி ஜெயம்மாவுடன் வசித்து வருகிறார். நாகபூஷணம் தோட்டக்காரராக வேலை செய்து வந்த நிலையில் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்னை இருந்து வந்துள்ளது. இதற்காக பல இடங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எதுவும் சரியாகவில்லை. இப்படியான நிலையில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாகபூஷணத்திற்கு சிறுநீரக பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் கடும் மனவேதனை அடைந்த அவர், மூன்று முறை பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவர் மனைவி ஜெயம்மா நாகபூஷணத்தைக் காப்பாற்றி மீண்டும் உடல்நலத்தை மீட்பதற்கு போராடியுள்ளார். நாளுக்கு நாள் நாகபூஷணத்தின்உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்து கொண்டே வந்துள்ளது. அதேசமயம் மனைவி தனக்காக கஷ்டப்படுவதைக் கண்டு அவர் மிகவும் நொந்து போனார்.
இப்படியான நிலையில் தன்னுடைய தற்கொலை முடிவை தடுத்து தனக்கு இடையூறாக இருக்கும் மனைவியைக் கொன்று பின்னர் தற்கொலை செய்துக்கொள்ள நாகபூஷண் விபரீத முடிவு செய்தார். தனது திட்டத்தின்படி நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் மனைவி வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். ஆனால் சற்றும் தாமதிக்காத நாகபூஷண் தன்னிடம் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டில் இருந்து நள்ளிரவில் அலறல் சத்தம் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்து புகை மண்டலமாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நாகபூஷணத்தின் மகனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மகன், நாகபூஷணம் மற்றும் ஜெயம்மாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதில் நாகபூஷணம் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். ஜெயம்மா மட்டும் படுகாயத்துடன் தொடர்ச்சியாக கம்மம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருமலையபாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)























