குழந்தை இல்லாததால் சண்டை.. மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்!
திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், வாரிசு வேண்டும் என வினோத் இன்னொரு திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்திருந்தார். இதனால் அவரது மனைவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற கொடூர சம்பவத்தில் குழந்தை இல்லாத காரணத்தால் மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
அம்மாநிலத்தில் உள்ள மொராதாபாத்தின் மஜோலா காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட காஷிராம் காலனியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நவீன் நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லாத நிலையில், அடிக்கடி அதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், வாரிசு வேண்டும் என வினோத் இன்னொரு திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்திருந்தார். இதனால் அவரது மனைவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அவர்களுக்குள் சண்டை ஏற்படும்போதெல்லாம் வினோத் மனைவியை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனிடையே தம்பதியினர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் பீகாரில் வசித்து வரும் தனது சகோதரன் ராஜ்குமாரை காண வினோத் சென்றிருந்தார். அவர் ஹோலி கொண்டாடுவதற்காக மீண்டும் நவீன் நகருக்கு வந்துள்ளார். அப்போது தம்பதியினர் இருவருக்குமிடையே மீண்டும் பிரச்னை வெடித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத் மனைவியை பழிவாங்க நினைத்தார். ஹோலி கொண்டாட வெளியே சென்று வரலாம் என தனது பைக்கில் மனைவியை அழைத்துச் சென்றார்.
வழியில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். தொடர்ந்து தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த வினோத் அங்கிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள காஷிராம் காலனி அருகே மயங்கி கிடந்தார். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதலில் அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து வினோத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டு தரப்பிலும் மாறுபட்ட தகவல்கள் வருவதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் சோக சம்பவம்
கர்நாடகாவில் 35 வயது பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷ்மா என்ற அந்த பெண் தனது மாமியார் கல்பனாவுடன் சமைப்பது தொடர்பாக வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மாமியார் சுஷ்மா சமைப்பதைத் தடுத்து அவருக்கு மன ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். இதனால் மனமுடைந்த சுஷ்மா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.























