நம்ப வைத்து கழுத்தை அறுத்த கும்பல்! - ரயில்வே வேலை ஆசை காட்டி ரூ.87 லட்சம் அபேஸ் !
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் ரூ.87 லட்சம் வரை மோசடி செய்த புகாரில், 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வாடுகின்றனர்.

புதுச்சேரி: மத்திய அமைச்சர்களைத் தெரியும் எனக்கூறி ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக நம்ப வைத்து, என்.எல்.சி ஊழியர் மற்றும் அவரது உறவினர்களிடம் ரூ.87 லட்சம் மோசடி செய்த புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதி உள்ளிட்ட 5 பேரை லாஸ்பேட்டை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அமைச்சர் கோட்டா என ஆசை வார்த்தை
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ஊத்தாங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (43). இவர் நெய்வேலி என்.எல்.சி-யில் தற்காலிகத் தொழிலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு உறவினர் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு சாமிநாதன், தனக்கு மத்திய அமைச்சர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அமைச்சர் கோட்டாவில் தபால் துறை மற்றும் ரயில்வேயில் வேலை வாங்கித் தர முடியும் என்றும் செந்தில்குமாரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய செந்தில்குமார், முதலில் தனது மனைவிக்கு வேலை கோரி ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார்.
டெல்லியில் போலி நேர்காணல்
தொடர்ந்து, ரயில்வேயில் 'குரூப்-சி' பணி பெற்றுத் தருவதாகக் கூறி செந்தில்குமாரின் சகோதரி மகன் தமிழ்செல்வனிடம் ரூ.14 லட்சம் பெற்றுள்ளார். பின்னர் தமிழ்செல்வனை டெல்லிக்கு அழைத்துச் சென்று போலி நேர்காணல், மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, அவருக்குப் போலி பணி நியமனக் கடிதத்தையும் வழங்கியுள்ளார்.
இதை உண்மை என நம்பிய செந்தில்குமார், தனது உறவினர்களின் மகன்கள் 4 பேருக்கு வேலைக்காக மேலும் ரூ.70 லட்சம் என மொத்தம் ரூ.87 லட்சம் பணத்தை சாமிநாதன், அவரது மனைவி சலோமி செல்வராணி, உறவினர் ராஜசேகர், அவரது மனைவி நகோமி ஞானமணி மற்றும் நண்பர் சிவராமன் ஆகியோரிடம் பல்வேறு தவணைகளாகக் கொடுத்துள்ளார்.
பணமின்றி திரும்பிய காசோலைகள்
வேலை கிடைக்காமல் காலம் தாழ்த்தியதால் சந்தேகமடைந்த செந்தில்குமார் விசாரித்தபோது, வழங்கப்பட்ட பணி ஆணைகள் அனைத்தும் போலி எனத் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த செந்தில்குமார் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, சாமிநாதனின் மனைவி சலோமி செல்வராணி ரூ.87 லட்சத்திற்கு காசோலைகளை (Cheques) வழங்கியுள்ளார். ஆனால், அந்த காசோலைகள் அனைத்தும் பணமின்றித் திரும்பின.
போலீசார் வழக்குப் பதிவு
இதுகுறித்து செந்தில்குமார் புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார். மனுவை, விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், மோசடி தொகை ஒரு கோடி ரூபாயிற்கு குறைவாக உள்ளதால், லாஸ்பேட்டை போலீசாரே விசாரிக்க பரிந்துரை செய்தனர். அதன்பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், சாமிநாதன், அவரது மனைவி சலோமி செல்வமணி, ராஜசேகர், அவரது மனைவி நகோமி ஞானமணி, நண்பர் சிவராமன் ஆகியோர் மீது, அரசு வேலை வாங்கி தருவாதக கூறி மோசடி செய்ததாக வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் கேட்கும் இடைத்தரகர்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், அரசுப் பணிகள் அனைத்தும் முறையான தேர்வுகள் மூலமே நிரப்பப்படுகின்றன என்றும் காவல்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















