பெண்ணை நெருக்கமாக பழகவிட்டு வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் - சிக்கியது எப்படி?
பெண்ணை நெருக்கமாக பழகவிட்டு வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு. பெண் உட்பட மூவரைக் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பழனியில் பைனான்சியர்களை குறி வைத்து பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரைச் சேர்ந்தவர்கள் ராணி சித்ரா, நாராயணன், துர்க்கை ராஜ், ராணி சித்ரா காவல்துறையில் சில காலம் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் ராணி சித்ரா பழனி நகரில் பைனான்ஸ் தொழில் செய்பவர்களை குறி வைத்து ஆசை வார்த்தை கூறி, நெருக்கமாக பழகி பின்னர் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். பழனியைச் சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்யும் சுகுமார் என்பவர் ராணி சித்ராவின் வலையில் விழுந்து பல லட்சம் ரூபாயை இழந்த நிலையில் மீண்டும், மீண்டும் பணம் கேட்டு ராணி சித்ரா மிரட்டியதால் பழனி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் ராணி சித்ரா மற்றும் நாராயணன், துர்க்கைராஜ் ஆகியோர் சேர்ந்து தன்னை மிரட்டி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்பதாகவும், தர மறுத்தால் ராணி சித்ராவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி நற்பெயரை கெடுத்து விடுவதாகவும் கூறி மிரட்டியதாக புகாரில் தெரிவித்துள்ளார். புகாரைப் பெற்ற பழனி நகர காவல் துறையினர் நாராயணன், துர்க்கை ராஜ் இருவரையும் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது ராணி சித்ராவை ஆண்களிடம் நெருக்கமாக பழக வைத்து பின்னர் போட்டோ, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. நாராயணன், துர்க்கைராஜ் இருவரையும் பிடித்த போலீஸார் அவர்களின் செல்போனில் இருந்த வீடியோக்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் பைனான்சியர் சுகுமார் போன்று பல பேரிடம் ராணி சித்ரா மிரட்டி பணம் பறித்ததும், பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் பலரும் பயந்து போலீசில் புகார் தெரிவிக்காமல் ராணிசித்ராவிடம் பணத்தை கொடுத்து விட்டு வெளியே சொல்ல முடியாமல் இருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. துர்க்கை ராஜ் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள், அடிதடி கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. பழனியில் ரவுடித்தனம் செய்து வந்த துர்க்கை ராஜை ராணிசித்ரா பைனான்சியர்களை மிரட்ட பயன்படுத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த ராணி சித்ரா நாராயணன், துர்க்கை ராஜ் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பழனியில் பைனான்சியர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Before You Go
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
ட்ரெண்டிங் செய்திகள்






















