Crime: மகளுக்காக 13 வயது சிறுவனை கொன்ற தாய் - ஜுஸில் எலி பேஸ்ட், பள்ளி வாட்ச்மேன் மூலம் ஸ்கெட்ச்...
Crime: மகளை விட நன்றாக படித்ததற்காக 13 வயது சிறுவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணுக்கு, காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Crime: காரைக்காலில் 13 வயது சிறுவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
13 வயது சிறுவனை கொன்ற பெண்
காரைக்காலில் பள்ளியில் தனது மகளை காட்டிலும் நன்றாக படித்து, முதல் மதிப்பெண் எடுத்த மாணவனை விஷம் வைத்து கொலை செய்த பெண்ணுக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மாணவர்கள் இடையே நிலவிய ஆரோக்கியமான போட்டிக்காக, 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுவனை கொலை செய்த பெண்ணுக்கு, தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வாந்தி எடுத்து மயங்கி விழுந்த சிறுவன்:
காரைக்காலில் நேரு நகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வரும் ராஜேந்திரன்- மாலதி தம்பதியின் மகண் தான் பாலமணிகண்டன். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன், படிப்பு மட்டுமின்றி விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதியன்று நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவிற்கான ஒத்திகையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய பாலமணிகண்டன் வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் விஷம் அருந்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குளிர்பானத்தில் விஷம்..
இதையடுத்து கடைசியாக என்ன சாப்பிட்டாய் என சிறுவனிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது, நீங்கள் கொடுத்து அனுப்பியதாக பள்ளி காவலாளியான தேவதாஸ் அளித்த குளிர்பானத்தை அருந்தியதாக தெரிவித்துள்ளார். ஆனால், தாங்கள் அப்படி ஏதும் கொடுத்து அனுப்பவில்லையே என சந்தேகம் ஏற்பட்டு உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், காரைக்காலைச் சேர்ந்த சகாயராணி விக்டோரியா(46), பால மணிகண்டனின் பெற்றோர் கொடுத்ததாகக் கூறி, பள்ளிக் காவலாளி தேவதாஸிடம் குளிர்பானம் கொடுத்தது தெரியவந்தது. அதில் கலக்கப்பட்டு இருந்த விஷம் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 3-ம் தேதி இரவு பாலமணிகண்டன் உயிரிழந்தார்.
கொலைக்கான காரணம் என்ன?
இதனிடையே, சகாயராணியை கைது செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, பாலமணிகண்டனுக்கும், அவரது வகுப்பில் பயின்று வந்த சக மாணவி ஒருவருக்கும் படிப்பில் போட்டி இருந்ததுள்ளது. தனது மகளை விட நன்கு படித்து முதல் மதிப்பெண் பெற்றதோடு, விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சியிலும் சிறந்து விளங்கியதால் சகாய ராணிக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்சியில் பாலமணிகண்டனை பங்கேற்கவிடாமல் தடுக்கும் நோக்கில் விஷம் கலந்த குளிர்பானத்தை, பெற்றோரின் பேரில் கொடுத்தது தெரிய வந்துள்ளது.
ஆயுள் தண்டனை விதிப்பு:
மாணவன் கொலை தொடர்பான வழக்கு காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மோகன், குற்றம்சாட்டப்பட்ட சகாயராணி விக்டோரியாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். முன்னதாக, சகாய ராணிக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அரசு தரப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அந்த அளவுக்கு இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என குறிப்பிட்டார்.





















