ரூ.20 லட்சம் மதிப்புள்ள கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்... கூடுதல் விலைக்கு விற்ற உரிமையாளர் கைது
கோவையில் 1000 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் – கூடுதல் விலைக்கு விற்ற உரிமையாளர் கைது

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கேஸ் தட்டுப்பாட்டை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 1000 வணிக கேஸ் சிலிண்டர்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் குடோன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கோவையில் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஓட்டல்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் அதிக விலையில் சிலிண்டர்கள் விற்பனை செய்ததாக புகார் வந்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவின்பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவை – அவிநாசி சாலை, லட்சுமி மில் சந்திப்பு அருகே உள்ள விநாயகர் கோவில் வீதியில் செயல்பட்டு வந்த ஒரு கேஸ் நிறுவன குடோனில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு சுமார் 1000 வணிக கேஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது. அரசு மதிப்பில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து குடோன் உரிமையாளர் கார்த்திக் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவியும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுவதால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் கூடுதல் விலைக்கு கேஸ் சிலிண்டர்கள் விற்பவர்களுக்கு எதிராக தீவிர சோதனை நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.























