14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிக்கிய வகுப்பு தோழர்கள்!
ஒடிசாவில் பள்ளி மாணவிகள் மீது பாலியல் ரீதியான தாக்குதல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சக மாணவர்கள் ஒரு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் 9ம் வகுப்பு படிக்கும் சிறுமி சக வகுப்பு மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் ஒரு இளைஞர் ஈடுபட்டுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவமானது நடைபெற்றுள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த விவகாரத்தில் இளம் சிறார்கள் ஈடுபடுவது உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் ரீதியான பிரச்னைகள் தொடங்கி பெண்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் வரையிலான குற்றங்களுக்கு கடும் சட்டம், தண்டனைகள் இருந்தாலும் குற்றங்கள் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
அப்படியான நிலையில் அந்த 9ம் வகுப்பு மாணவி அதே வகுப்பில் படிக்கும் 5 மாணவர்கள், ஒரு இளைஞர் ஆகியோரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தாங்கள் மாட்டிக்கொள்ள கூடாது என இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து அச்சிறுமியை மிரட்டியுள்ளனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர்களில் ஒருவர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட அது வைரலாக பரவியது.
இந்த வீடியோவை சம்பந்தப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அந்த சிறுமியிடம் கேட்டபோது உடனடியாக அவர் நடந்த விஷயத்தையும், தான் மிரட்டப்பட்டதையும் அழுதுக்கொண்டே கூறியுள்ளார். சற்றும் தாமதிக்காமல் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலங்கிர் காவல்துறையில் புகாரளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வீடியோவைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
வீடியோவில் காணக்கூடிய ஆறு குற்றவாளிகளையும் நாங்கள் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். வீடியோவும், சிறுமி குடும்பத்தினர் அளித்த குற்றச்சாட்டுகளும் உண்மைதான். மருத்துவ பரிசோதனை மற்றும் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமி குடும்பத்தினர் வேண்டுகோளின்படி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
மற்றொரு சம்பவம்
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் 14 வயது சிறுமி நள்ளிரவில் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட அடர்ந்த காட்டில் விடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர். சிறுமி தனியாக சென்ற நிலையில் அவரது கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களால் கடத்தப்பட்டு அருகிலுள்ள காட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவளுடைய ஆடைகளைக் கிழித்து வீடியோ பதிவு செய்து மிரட்டி தாக்கியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள் பொழுது விடிந்ததும் வழியை கண்டுபிடித்து வீட்டிற்கு வந்த சிறுமி நடந்த விவரங்களை கூட, அவரது குடும்பத்தினர் உடனடியாக போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.























