மனைவியை கொன்று டிரம்மில் அடைத்து பைக்கில் எடுத்துச் சென்று புதைத்த கணவன் - 2 மாதங்களுக்கு பின் சிக்கியது எப்படி?
மனைவியை கொன்று டிரம்மில் அடைத்து 3 கி.மீ., பைக்கில் எடுத்து சென்று புதைத்த கணவர், இரண்டு மாதங்களுக்கு பின் போலீசாரிடம் சிக்கினார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் ( வயது 39 ) பெயின்டர். இவரது மனைவி பிரியா (வயது 26 ) இவர்களுக்கு ஆறு மற்றும் ஏழு வயதில் இரு மகன்கள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சிலம்பரசன், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், மனமுடைந்த பிரியா, ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதும், பின் சமாதானப்படுத்தி சிலம்பரசன் அழைத்து வருவதுமாக இருந்துள்ளது.
கடந்த இரு மாதங்களாக, பிரியாவை குறித்த எந்த தகவலும் இல்லாததால் நேற்று முன்தினம் பிரியாவின் குடும்பத்தினர் மகளை பார்க்க துராபள்ளம் கிராமத்திற்கு வந்துள்ளனர். அப்போது, இரண்டு மாதங்களுக்கு முன் வேறு ஒருவருடன் பிரியா ஓடிவிட்டதாக சிலம்பரசன் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களாக அம்மாவை காணவில்லை என குழந்தைகளும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரியாவின் பெற்றோர், ஆரம்பாக்கம்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில் பிரியாவை சிலம்பரசன் கொலை செய்து புதைத்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் பிரியாவின் நடத்தையில் சந்தேகமடைந்த சிலம்பரசன் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி ஏற்பட்ட தகராறின் போது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
அன்று இரவு, பிரியாவின் உடலை பிளாஸ்டிக் டிரம்மில் வைத்து பைக்கில் எளாவூர் ஏழு கண் பாலம் நோக்கி 3 கி.மீ., சென்றுள்ளார். அங்குள்ள சுடுகாடு அருகே பள்ளம் தோண்டி , பிரியாவின் உடலை புதைத்து பேரலை வீசி சென்றது தெரிய வந்தது.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ்பாபு முன்னிலையில் அழுகிய பிரியா வின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அதே இடத்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், சிலம்பரசனை கைது செய்தனர்.
நண்பர்களை விட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
சென்னை திருவேற்காடு சுந்தர சோழபுரம், சோழா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் ( வயது 45 ) தனியார் நிறுவன மேலாளர். இவரது மகன் தர்ஷன் ( வயது 16 ) பிளஸ் 1 மாணவர். இவர் தீபாவளியன்று , தனது நண்பர்கள் மூன்று பேரை வீட்டிற்கு அழைத்து வந்து பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளார். பின்பு நண்பர்களை வீட்டில் விடுவதற்காக ஸ்கூட்டரில் பட்டாபிராம் சென்றுள்ளார்.
அங்கு , நண்பர்களை இறக்கிவிட்டு, கண்ணப்பாளையம் சோராஞ்சேரி சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். ஆயில் சேரி லிங்கம் நகர் அருகே வந்த போது திடீரென நாய் குறுக்கே வந்ததால், நிலைதடுமாறிய தர்ஷன் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் இடது பக்க தலையில் பலத்த காயம் அடைந்த தர்ஷன் அதிக ரத்தம் வெளியேறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து ஆவடி வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் , தர்ஷனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





















