கன பொழுதில் சைக்கிள் அபேஸ்... கோவையை அதிர வைக்கும் பலே கில்லாடிகள்..
குட்டி யானையில் வந்த பலகில்லாடி திருடர்கள் - கோவையில் அதிர வைக்கும் சி.சி.டி.வி பதிவு.

கோவையில் குட்டியானையில் பழைய பொருள் வாங்குவது போல் ஒலிபெருக்கியில் சத்தம் போட்டுக் கொண்டே வந்து வீட்டின் முன் நின்றிருந்த சைக்கிளை திருடும் மர்மநபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியநாயக்கன்பாளையத்தில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்குவதாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தபடி குட்டி யானை வாகனம் தெருவில் மெதுவாக வலம் வந்தது. அந்த வாகனத்தில் வந்த இருவர், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த சைக்கிளைக் கண்டனர். பின்னர், அப்பகுதியில் ஆள் நடமாட்டம் உள்ளார்களா என நோட்டமிட்ட மர்மநபர்கள், யாரும் இல்லை என உறுதி செய்தவுடன் தங்களது வாகனத்தில் இருந்த ஒலிபெருக்கி அணைத்துவிட்டு மின்னல் வேகத்தில் அந்த சைக்கிளைத் தூக்கி குட்டி யானை வாகனத்தின் பின்பகுதியில் ஏற்றிக் கொண்டு அங்கு இருந்து சென்றனர்.
சிறிது நேரம் கழித்து வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது சைக்கிள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகில் இருந்த வீட்டின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, பழைய பொருள் வாங்குவது போல் வந்தவர்களே சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.























