“நாம சேர்ந்து செத்துருவோம்” .. சாகும் நேரத்தில் எஸ்கேப் ஆன காதலன்.. இளம்பெண் கொலை!
வைஷாகானுக்கும், அந்த பெண்ணும் நீண்ட காலம் அறிமுகம் இருந்துள்ளது. சிறு வயதில் இருந்து வைஷாகான் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். அதனை சிறு வயதிலேயே அப்பெண்ணும் நம்பியுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டதாக பதியப்பட்ட வழக்கின் விசாரணை முடிவில் அது திட்டமிட்ட கொலை என தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எலத்தூரில் தான் இந்த கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த ஜனவரி 24ம் தேதி அங்குள்ள பட்டறை ஒன்றில் இருந்து இளம்பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எலத்தூர் போலீசார் உள்ளிட்ட அனைவரும் இதனை தற்கொலை என நினைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கைக் கூட அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதை உறுதிப்படுத்தியது.
ஆனால் அப்பெண் வீட்டில் இருந்து ஏன் இந்த பட்டறையில் வந்து தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி போலீசாருக்கு வலுத்தது. சம்பந்தப்பட்ட பட்டறை உரிமையாளரான வைஷாகானிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அடிக்கடி அந்த பெண் வைஷாகான் பட்டறைக்கு வந்து செல்லும் காட்சிகள் இருந்துள்ளது. இதனால் அந்த பெண் தற்கொலை விஷயத்தில் ஏதோ மர்மம் உள்ளது என நினைத்த போலீசார் அவரை துருவி துருவி விசாரணை செய்ததில் உண்மை வெளிப்பட்டது. அதாவது வைஷாகானுக்கும், அந்த பெண்ணும் நீண்ட காலம் அறிமுகம் இருந்துள்ளது. சிறு வயதில் இருந்து வைஷாகான் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக அந்த பெண் கேட்டபோது காதலிப்பதாக கூறியுள்ளார். அதனை சிறு வயதிலேயே அப்பெண்ணும் நம்பியுள்ளார்.
அப்படியாக காதல் ஆசை காட்டி பலமுறை அந்த பெண்ணை வைஷாகான் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வைஷாகானுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. எனினும் அந்த பெண் தன்னையும் திருமணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். இதனிடையே சமீபத்தில் மீண்டும் அந்த பெண் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் வைஷாகான் மறுக்கவே இருவருக்குமிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பெண் தங்களுக்கிடையேயான உறவை தனது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் கூறினால் தனது வாழ்க்கை பாழாகிவிடும் என நினைத்த வைஷாகான் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி தன்னால் உன்னை திருமணம் செய்துக் கொண்டு வாழ முடியாது. அதனால் சேர்ந்து சாகலாம் என கூறி ஜனவரி 24ம் தேதி பட்டறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தூக்கு மாட்ட முடிவு செய்துள்ளனர். இரண்டு ஸ்டூல் போடப்பட்டு அந்த பெண் ஏறி தனது கழுத்தில் கயிறை மாட்டி இறுக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வைஷாகான் மற்றொரு ஸ்டூலில் ஏறாமல் அந்த பெண் இருந்த ஸ்டூலை தட்டி விட அப்பெண் துடிதுடித்து இறந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் வைஷாகான் மீது கொலை வழக்கோடு, போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.























