குடும்பத்துக்கு அவமானம்.. பழிவாங்க இனிப்பு வழங்கிய மாமியார்.. மருமகள் உட்பட 3 பேர் துடிதுடித்து பலி!
மத்தியப் பிரதேசத்தில் மருமகள் மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய எலி விஷம் கலந்த இனிப்புகளை சாப்பிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மாமியார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் எலி விஷம் கலந்த இனிப்புகளை சாப்பிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலை என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 9ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிந்த்வாராவின் ஜுனார்தியோ பகுதியில் பொது சுகாதார பொறியியல் துறை அலுவலகம் உள்ளது. அதன் அருகே காய்கறிகள் மற்றும் இனிப்புகள் கொண்ட ஒரு பை இருந்துள்ளது. இந்த பைக்கு யாரும் உரிமை கோராத நிலையில் அந்த அலுவலகத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு காவலர் தஷ்ரு யதுவன்ஷி எடுத்துப் பார்த்துள்ளார்.
அப்போது ஆர்வம் மிகுதியில் அதனுள் இருந்த இனிப்புகளை அவர் ருசித்துள்ளார். இதனையடுத்து கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட தஷ்ரு யதுவன்ஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஜனவரி 11ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் தஷ்ரு யதுவன்ஷி அந்த இனிப்பு டப்பாவை அலுவலகம் அருகிலுள்ள கடைக்காரருக்கு கொடுத்துள்ளார். அவர் தன் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அந்த வீட்டில் இருந்த 22 வயதான குஷ்பூ கதுரியா மற்றும் 72 வயது தாத்தா உள்ளிட்ட குடும்பத்தினர் சாப்பிட்ட நிலையில் கடுமையாக நோய்வாய்ப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குஷ்பூவும், அவரின் தாத்தாவும் உயிரிழந்தனர். தாயும், சகோதரியும் உயிர் பிழைத்தனர்.
மூன்று நாட்களில் மூன்று மரணங்கள் நிகழ்ந்ததால் போலீசாரால் இதனை சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை. விசாரணையின் முடிவில் இவற்றுக்கெல்லாம் அடிப்படை இனிப்பு டப்பா என்பது தெரிய வந்தது. அதனை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அதில் எலி விஷம் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து பல திடுக்கிடும் தகவல்கல் வெளியானது. அதாவது கடந்த 2024 ஜனவரி மாதம் குஷ்புவுக்கு திருமணம் நடைபெற்றது.
ஆனால் அவரது நடத்தை மீது மாமியார் கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததாக குஷ்பு குற்றம் சாட்டினார். இதனால் தங்கள் குடும்பத்தினருக்கு அவமானம் நடந்ததாக குஷ்பு மாமியார் கடும் கோபமடைந்துள்ளனர். இதனை சரி செய்யவும், மருமகளுக்கு தக்க பாடம் புகட்டவும் மாமனார் ஜாது கசார், மைத்துனர் சுபம் மற்றும் மைத்துனி ஷிவானி ஆகியோருடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி மூன்று இனிப்பு டப்பாக்களில் எலி விஷம் கலந்து அந்த பையை குஷ்புவின் தந்தை கடைக்கு அருகில் வைத்துள்ளனர். எப்படியும் குஷ்பு அல்லது அவரது குடும்பத்தினர் உட்கொண்டு மரணிப்பார்கள் என்பதை எதிராளிகள் நம்பினர். அதன்படி குஷ்பு, அவரது தாத்தா தவிர சம்பந்தமில்லாத காவலாளியும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தடயவியல் பரிசோதனைக்குப் பிறகு இனிப்புகளில் உள்ள ஆர்சனிக் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமாகவும், பலரைக் கொல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்பதும் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் இந்த சம்பவத்தில் யாரெல்லாம் தொடர்புடையவர்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















