விழுப்புரத்தில் வாகன சோதனையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து சிக்கிய 3 கொள்ளையர்கள்...!
’’விழுப்புரம் மாவட்டத்தில் நகரம் முதல் கிராமம் வரை நோட்டமிட்டு கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்துள்ளதால் வாகன சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்’’

விழுப்புரம் பாண்டியன் நகரில் உதவி ஆய்வாளர் பிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை போலீசார், சந்தேகத்தின் பேரில் வழிமறித்து விசாரித்தனர். காரில் இருந்த 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். உடனே அவர்கள் 3 பேரையும் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 3 பேரும் திருநெல்வேலி மாவட்டம் திருகுருன்குடியை சேர்ந்த சுரேஷ் (31), கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த தாஸ் (38), ராஜதுரை (29) என்பதும், இவர்கள் 3 பேரும் விழுப்புரம், கண்டமங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த கார் மற்றும் 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார், விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் வழிப்பறி-கொள்ளை
தமிழகத்தின் வடபகுதியில் முக்கிய நகரமாக விழுப்புரம் உள்ளது. இந்த வழியாகத்தான் தென் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் சென்னைக்கு செல்கின்றன. எனவே விழுப்புரத்தில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் வாகன நெருக்கடி அதிகம் காணப்படும். இவ்வாறு செல்லும் வாகனங்களை கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து பணம் பறித்து வருகிறார்கள். இது போன்ற சம்பவம் விழுப்புரத்தில் நாளுக்கு நாள் அரங்கேறி வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் காணப்படுகின்றனர்.

இது இவ்வாறு இருக்க விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட திண்டிவனம், மயிலம், ஒலக்கூர், வெள்ளிமேடு பேட்டை ஆகிய பகுதிகளில் பணிபுரியும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணிமுடிந்து இரவு நேரம் வீடு திரும்புகின்றனர். இவர்களை குறிவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை பறித்து வருகிறார்கள். தொடர்ந்து நடந்துவரும் வழிப்பறிகளால் டாஸ்மாக் ஊழியர்கள் இரவு நேரத்தில் செல்வதற்கு பயப்படுகின்றனர்.
மேலும் கொள்ளையர்கள் கிராம பகுதிகளை நோட்டமிடுகின்றனர். பொதுவாக கிராமத்தில் உள்ள விவசாயிகள், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வீட்டு சாவியினை வெளி பகுதியில் வைத்து செல்வார்கள். இதனை பகல் நேரத்தில் கண்காணிக்கும் கொள்ளை கும்பல் அந்த சாவியினை எடுத்து திறந்து வீட்டுக்குள் புகுந்து விடுகிறார்கள். பின்னர் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர். தொடர்ந்து இது போன்ற சம்பவம் அரங்கேறி வருகிறது. இதுபோன்று தொடர்ந்து வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி ஆகியவை நடந்து வருவதால் விழுப்புரம் நகர் மற்றும் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போலீசார் 3 மோட்டார் சைக்கிளில் மாவட்டம் முழுவதும் ரோந்து வந்தனர். அதேபோன்று தற்போதும் போலீசார் ரோந்து பணியை முடுக்கிவிட வேண்டும். மேலும் நெடுஞ்சாலைத்துறை போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Before You Go
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
ட்ரெண்டிங் செய்திகள்






















