நிமிடங்களில் மாறும் பேட்டரி... தடையில்லா பயணம்! - பியாஜியோ மின்சார ஆட்டோவின் மாஸ் என்ட்ரி!
புதுச்சேரியில் பியாஜியோ நிறுவனத்தின் புதிய மின்சார ஆட்டோ அறிமுகம்: பேட்டரி ஸ்வாப் தொழில்நுட்பத்துடன் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்!

புதுச்சேரி: புதுச்சேரியில் பியாஜியோ நிறுவனத்தின் புதிய மின்சார ஆட்டோ அறிமுகம் செய்து பேட்டரி ஸ்வாப் தொழில்நுட்பத்துடன் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டல் அக்கார்டில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான பியாஜியோ (Piaggio Vehicles Private Limited) தனது புதிய மின்சார வர்த்தக வாகனத்தை (ஆட்டோ) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தற்காலப் பசுமைப் போக்குவரத்து வாகனத்தைப் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி முறைப்படி அறிமுகம் செய்து வைத்து, சேவையைத் தொடங்கி வைத்தார்.
இந்த அறிமுக விழாவில் பியாஜியோ நிறுவனத்தின் துணைத் தலைவர் மட்டியோ கொலனின்னோ, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் பட்ஜாத்யா ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் புதுச்சேரியில் பியாஜியோ மின்சார வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகமான 'பியூச்சர் ஆட்டோமொபைல்ஸ்' (Future Automobiles) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜத் மல்ஹான் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் முகமது நிகாஸ் ஜக்ரியா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புரட்சிகர பேட்டரி ஸ்வாப் (Battery Swap) தொழில்நுட்பம்:
வழக்கமான மின்சார வாகனங்களைப் போல இந்த ஆட்டோக்களை பல மணி நேரம் காத்திருந்து சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதுதான் இதன் ஆகச்சிறந்த சிறப்பம்சமாகும். இந்த வாகனத்தில் அதிநவீன 'பேட்டரி ஸ்வாப்பிங்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாகனத்தின் பேட்டரி தீர்ந்தவுடன், அதனைச் சில நிமிடங்களிலேயே அகற்றிவிட்டு, அங்குத் தயார் நிலையில் உள்ள முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மற்றொரு பேட்டரியை உடனடியாகப் பொருத்திக் கொண்டு பயணத்தைத் தொடர முடியும்.
ஓட்டுநர்களின் வருமானம் உயரும்:
இவ்விழாவில் பேசிய பியாஜியோ நிறுவனத்தின் பிரதிநிதிகள், "இந்தியாவின் மின்சார வர்த்தகப் போக்குவரத்துத் துறையில் இந்த பேட்டரி ஸ்வாப் தொழில்நுட்பம் ஒரு மிகப்பெரிய புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். சார்ஜ் செய்வதற்காகக் காத்திருக்கும் நேரம் மிச்சமாவதால், வாகனங்கள் சாலையில் இயங்கும் நேரம் (Operational Time) அதிகரிக்கும். இதனால் வணிக ரீதியாக இந்த ஆட்டோக்களைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களின் தினசரி வருமானம் கணிசமாக உயரும்" என்று உறுதியளித்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமைப் போக்குவரத்து:
புதுச்சேரியில் இந்த நவீன மின்சார வாகனச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பிராந்தியத்தில் மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது கார்பன் உமிழ்வைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான புதுச்சேரி அரசின் முயற்சிக்கு ஒரு முக்கிய உந்துசக்தியாக அமையும் எனப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















