India EU Trade Deal | இந்தியா - ஐரோப்பிய யூனியன் DEAL! சாதித்து காட்டிய மோடி! இனி வரி பூஜ்ஜியம்
இந்தியா ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலமாக ஜவுளி, ஆபரணங்கள், காலணிகள், கடல்சார் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான வரி பூஜ்ஜியமாக குறைகிறது. அதேபோல் மதுபானங்களுக்கான வரியும் படிப்படியாக குறையும்.
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வான் டெர் லேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஐரோப்பிய யூனியன் - இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தமானது 200 கோடி மக்களை உள்ளடக்கிய ஒரு சந்தையை உருவாக்கும். அதாவது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்டுள்ளது
இந்த ஒப்பந்தத்தை அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தால் பெரும்பாலான துறைகளுக்கான வரி பூஜ்ஜியமாக குறையும். ஜவுளி மற்றும் ஆடைகள் மீதான வரி 12% லிருந்து பூஜ்ஜியமாக குறையும். ரசாயனப் பொருட்கள் மீதான வரி 12.8% லிருந்து பூஜ்ஜியமாக குறையும். ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் மீதான வரி 4% லிருந்து பூஜ்ஜியமாக குறையும். கடல்சார் பொருட்கள் மீதான வரி 26% லிருந்து பூஜ்ஜியமாக குறையும். ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 90% பொருட்களின் மீதான வரி விதிப்பு ரத்து செய்யப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் திருப்பூர் ஏற்கனவே 30 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் திருப்பூர் ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்கு முன்னேற்றமாக இருக்கும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீதான வரியும் படிப்படியாக குறையக்கூடும். Wine மீதான வரிகள் 150% லிருந்து 20 சதவீதமாகவும் பீர் மீதான வரி 110% லிருந்து 50% ஆகவும் குறையும். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப் அதிக வரி விதித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் மத்திய அரசு போட்டுள்ள ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.























