"விசிலின் ராசி இல்லாத வரலாறு"ACCOUNT-ஐ OPEN செய்வாரா விஜய்?
சத்தம் பத்தாது விசில் போடு என தவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்ததை அக்கட்சியினர் கொண்டாடி வரும் வேளையில், இந்திய தேர்தல் வரலாற்றில் விலைபோகாத சின்னமாகவே விசில் சின்னம் இருந்து வருவதாக தரவுகள் சொல்கின்றன. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் விஜய்யின் விசில் சத்தம் காதை கிழிக்குமா இல்லை டெபாசிட் இழந்து காத்து தான் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில் தவெகவினரின் விசில் சின்னம் கடந்து வந்த பாதை குறித்து குட்டி ரீவைண்ட் ஒன்றை காணலாம்.
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் சென்சார் போர்டு பிரச்னையால் இன்னும் வெளியாகாத நிலையில், தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் கொண்டாடும் வகையில் அவர்கள் கேட்ட `விசில்' சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது.
மேடைகளில், பிரசாரங்களில் எவ்வளவுதான் முழங்கினாலும் மக்கள் மனதில் சின்னத்தை பதியவைப்பது எளிதான காரியமல்ல. அந்த வகையில், மக்களுக்கு மிகப் பரிட்சையமான சின்னமாக விசில் சின்னம் இருப்பதால் தவெக-வினர் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். கேட்ட சின்னமே கிடைத்து தவெக-வுக்கு சாதகமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதேசமயம், விசில் சின்னம் இதற்கு முன்பு பிரபல நடிகர்கள், அரசியல்வாதிகள் பலருக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சமகாலத்தில் வலதுசாரி அரசியலை குறிப்பாக ஆர்.எஸ்.எஸ், பாஜக-வை கடுமையாக எதிர்க்கும் நடிகர் பிரகாஷ்ராஜ், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டபோது அவருக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஆனால், அந்தத் தேர்தலில் பிரகாஷ்ராஜ் 28,906 வாக்குகளுடன் தோல்வியடைந்தார்.
அதேபோல், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை விருக்காம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அத்தேர்தலில் வெறும் 1,440 வாக்குகளுடன் படுதோல்வியடைந்தார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் தமிழருவி மணியன் தனது இயக்கத்தை ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸோடு இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை மட்டுமல்லாது, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், செயற்பாட்டாளருமான ஜெயபிரகாஷ் நாராயணின் லோக் சத்தா கட்சி 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திராவில் சில தொகுதிகளில் போட்டியிட்டபோது அவர்களுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை.
அதேபோல், தெலங்கானாவில் 2023-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய பிரஜா காங்கிரஸ் என்ற சிறிய கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்சியும் அத்தேர்தலில் தோல்வியையே சந்தித்தது.
இவ்வாறு விசில் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் பெரும்பாலும் தோல்விகளைச் சந்தித்திருந்தாலும் மகாராஷ்டிராவில் பிரபல கட்சியாக அறியப்படும் பகுஜன் விகாஸ் அங்காடி கட்சி விசில் சின்னத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட், அதே ஆண்டில் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் 2 சீட், 2014 சட்டமன்றத் தேர்தலில் 3 சீட் என குறிப்பிடத்தக்க வெற்றிகளை விசில் சின்னத்தில் பெற்றிருக்கிறது. இருப்பினும், கடைசியாகப் போட்டியிட்ட 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் ஒரு சீட் கூட வெல்லவில்லை.
தேர்தல் வரலாற்றில் விசில் சின்னத்துக்குப் பின்னால் பெரிய வெற்றிகரமான சின்னம் என்ற பிம்பம் இல்லாததால், வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை த.வெ.க பெறுமா என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
இதில் கவனிக்க வேண்டியாது என்னவென்றால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக போட்டியிடாத தொகுதிகளில் விசில் சின்னம் வேறொருவருக்கு ஒதுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறத்து.
ஒருவேளை 234 தொகுதிகளிலும் தவெக போட்டியிட்டால் விசில் சின்னம் இவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும். மேலும், இந்தத் தேர்தலில் த.வெ.க குறைந்தபட்சம் 6 சதவிகித வாக்குகள் பெற்றால் அடுத்த தேர்தலிலும் விசில் சின்னம் தவெக-வுக்கே ஒதுக்கப்படும்.
ஒருவேளை 6 சதவிகித வாக்குகளை த.வெ.க பெறத் தவறினால் அடுத்தடுத்த தேர்தலில் விசில் சின்னம் ஒதுக்கப்படுமா என்பது தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். எனவே, குறைந்தபட்சம் விசில் சின்னத்தை தக்கவைக்கும் அளவுக்கு வெற்றிபெற தவெக விரும்பும்.






















