PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு
சில காலம் பொது வாழ்வில் இருந்து ஓய்வெடுக்க உள்ளதாகவும், மதுரை மத்திய தொகுதியில் தோல்வியடைவேன் என எதிர்பார்க்கவில்லை என்றும் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். மேலும் விஜய்க்கும், செங்கோட்டையனுக்கும் ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் சுந்தர்.சி யும் தவெக சார்பில் முஸ்தபாவும் களமிறங்கினர். தொடர்ந்து 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பிடிஆர் இந்த தேர்தலில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்தநிலையி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பிடிஆர். அதில், ‘கடந்த 10 ஆண்டுகளாகச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியது, எனது குழுவினரோடு சேர்த்து இரவு பகல் பாராது உழைக்க வேண்டிய ஒரு தொடர் பொறுப்பாக இருந்தது. இந்நிலையில், எனது சொந்த விருப்பங்களின்படி நேரத்தையும் அன்றாட அட்டவணையையும் முழுமையாகக் கையாளும் வகையில், சில வாரங்கள் ஓய்வெடுக்க ஆவலோடு காத்திருக்கிறேன். முன்பு நேரமின்மை காரணமாக என்னால் ஒப்புக்கொள்ள முடியாமல் போன, உரையாற்றுவதற்கான அழைப்புகளை இனி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்.
கடந்த 10 ஆண்டுகளில் வாக்காளர்களுக்காகவும், தொகுதிக்காகவும் நான் செய்த பணிகள் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட கூட்டணியின் அடிப்படையில், தேர்தலில் தோல்வியடைவேன் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. ஏதேனும் ஒரு கட்டத்தில் அரசுக்கு எதிரான அலையின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை நாங்கள் உறுதியாக அறிந்திருந்தோம், மேலும் இந்தத் தோல்வியை நான் மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். நாம் சுயபரிசோதனை செய்து மேம்பட வேண்டும். ஆனால், தேர்தலில் தோற்ற போதிலும், வாக்குகளுக்குப் பணம் கொடுக்கக் கூடாது என்ற எனது கொள்கையில் நான் உறுதியாக இருந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.
தவெக 35% வாக்குகளை எட்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. நாம் நிச்சயமாக ஒரு புதிய சகாப்தத்தில் இருக்கிறோம். தவெக தலைமையிலான அரசு அமைந்தாலும், முதலமைச்சர் சொல்வது போல இது அனைவருக்குமான அரசு. புதிய முதலமைச்சர் விஜய்க்கும் அவரது அமைச்சரவைக்கும் குறிப்பாக நிதியமைச்சர் செங்கோட்டையனுக்கும் வெற்றிகரமான பதவிக்காலம் அமைய வாழ்த்துகிறேன். ஒரு புதிய தொடக்கம், ஒரு தெளிவான பாதை என்ற சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒவ்வொரு அம்சத்திலும் தைரியமாக சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும். சிறிது காலத்திற்கு – குறைந்தது அடுத்த தேர்தல் வரையிலாவது – நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக இருக்கப் போவதில்லை என்ற யதார்த்தத்திற்கு நான் பழகி வருகிறேன். நான் மீண்டும் வருவேன் – புத்துணர்ச்சியுடனும் புதிய ஆற்றலுடனும்” என தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















