MK Stalin Warns KO Thalapathi | "காங்கிரஸ் பத்தி பேசாதீங்க" கோ.தளபதிக்கு வார்னிங்! ஆக்ஷனில் இறங்கிய முதல்வர்
‘’இனி காங்கிரஸ் பத்தி பேசுனா அவ்ளோதான்’’ என திமுக மதுரை மாநகர செயலாளர் கோ தளபதிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வார்னிங் கொடுத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தன்னுடைய வலுவான கூட்டணியை தக்க வைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது திமுக. ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி மாணிக்கம் தாகூர், முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற தலைவர் ராஜேஸ் உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை முன் வைத்து திமுகவை சீண்டி வருகின்றனர். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய டேட்டா பிரிவு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தியும் தன் பங்கிற்கு விஜயை சந்திப்பது, அவருக்கு விசில் சின்னம் கிடைத்தவுடன் வெற்றிக்கான விசில் உதப்பட்டுவிட்டது என்று பதிவிடுவது என்று திமுகவை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், மதுரை சுப்பிரணியபுரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக மாநகர மாவட்ட செயலாளரும் கோ.தளபதி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, ‘காங்கிரஸ் கட்சியில் சிலர் இருக்கிறார்கள். அவர்களது பெயரை சொன்னாலும் ஒன்றும் தவறில்லை. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றைதான் குறிப்பிடுகிறேன். அவர்கள் எம்.பி ஆகிவிட்டார்கள். இந்த தேர்தலில் யார் எம்.எல்.ஏ ஆனால் என்ன? ஆகாவிட்டால் என்ன ? என நினைக்கிறார்கள். அதனால்தான், இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நேரத்தில் ஆட்சியில் பங்கு என்று கேட்கிறார்கள். நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. நாம் தான் இந்த கூட்டணியின் முக்கிய கட்சி. அப்படியிருக்கும்போது, ஒரு தொகுதிக்கு மூன்றாயிரம், நான்காயிரம் ஓட்டு மட்டுமே இருக்கும் காங்கிரஸ், அதுவும் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத காங்கிரஸ் இந்த அளவுக்கு பேசுவது மனதிற்கு வருத்தமாக உள்ளது’ என்று பொங்கியிருந்தார்.
இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தேசிய தலைமையிடம் சொல்லுவேன் என்றும் கூட்டணி கட்சிக்கான தர்மத்தை மதித்து பேச வேண்டும் என ஜோதிமணியும் கூறியிருந்தனர். அதோடு, தளபதி மீது முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன் பங்கிற்கு கண்டனம் தெரிவித்தார் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை.
இப்படியான கருத்துகள் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பேசுபொருளாக மாறிய நிலையில், இந்த விவகாரத்தில் திமுக திடீர் உத்தரவு ஒன்றை அனைத்து மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு போட்டுள்ளது. கூட்டணி தொடர்பாகவும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி பற்றி யாரும் எந்த விமர்சனத்தையும் பொதுவெளியில் முன் வைக்கக் கூடாது என்று வாய்மொழியாக கூறப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, மதுரை மாவட்ட மாநகர் செயலாளர் கோ.தளபதிக்கு திமுக தலைமையிடம் இருந்து உத்தரவு பறந்திருக்கிறது. இனி காங்கிரஸ் கட்சி பற்றியும் அதன் நிர்வாகிகள் குறித்தும் பேசவோ, விமர்சிக்கவோ கூடாது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக மீடியாக்களிடமிடமும் பேச தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கக் கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது























