ரஜினி பட ஷூட்டிங்கில் விபத்து 28 வயது இளைஞர் உயிரிழப்பு போலீஸ் தீவிர விசாரணை!
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் 28 வயது இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2023-ல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், அனிருத் இசையில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் ஜெயிலர்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கேமியோ செய்தது போல, இப்படத்தில் பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டதாக கடந்த ஏப்ரலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், இன்னும் சில காட்சிகள் சென்னை ECR-ல் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை நடைபெற்ற ஷூட்டிங்கில் செட் அமைக்கும் பணியின்போது 28 வயது பட்டதாரி இளைஞர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
சேலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்றறியப்படும் அவர் உடனடியாக பனையூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீஸார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி கையோடு, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
படப்பிடிப்பில் நடந்த இந்த எதிர்பாராத சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















