H Raja Hospitalised | "யாரும் CALL பண்ணாதீங்க” உடல்நிலை எப்படி இருக்கு? H.ராஜா தரப்பில் UPDATE
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் H.ராஜாவின் எண்ணிற்கு யாரும் சில நாட்களுக்கு அழைக்க வேண்டாம் என அவரது தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனியார் செய்தி நிறுவனம் நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் திடீரென மயங்கியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அவரது உடல்நிலை சீராக இல்லாததால் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் முதல்கட்ட சிகிச்சையில் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக சொல்கின்றனர். இதனை தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஹெச்.ராஜா.
தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் ஹெச்.ராஜா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பாஜகவினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆனால் சிலர் ஹெச்.ராஜாவை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதற்கு வைரமுத்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுதொடர்பான அவரது பதிவில் உடல் நலக் குறைவு என்பது உலக நியதி யாருக்கும் எப்போதும் எதுவும் நேரலாம் அது எள்ளி நகையாடும் பொருளன்று பரிவு காட்டுவது பண்பாடு; நலம்பெற வாழ்த்துவது நாகரிகம் பா.ஜ.க தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா அவர்கள் உடல்நலக் குறைவு கண்டிருப்பது உள்ளத்திற்கு அதிர்ச்சி தருகிறது அவர் விரைவில் நலமுறவும் விரும்பிய பணிகளை ஆற்றி வரவும் வாழ்த்துகிறேன் தமிழ்நாட்டின் கதகதப்பான அரசியலுக்கு அவரும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தற்போதைய உடல்நிலை தொடர்பாக அவரது தரப்பில் இருந்து ஹெச்.ராஜாவின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் H.ராஜா அவர்கள் நேற்றைய தினம் NDTV விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எதிர்பாராதவிதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் உடனடியாக சென்னையிலுள்ள பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இன்னும் ஓரிரு தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற்று இறைவன் அருளால் பூரண குணமடைந்து நலமோடு வீடு திரும்புவார். மேலும் திரு.H.ராஜா ஜி அவர்கள் மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவரது அலைபேசி எண்ணிற்கு தேசபக்த உறவுகள் சில தினங்களுக்கு தயவுசெய்வு அழைக்கவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என கோரிக்கை வைத்துள்ளனர்.





















