Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை பாஜாக தேசியத் தலைமை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளது.
பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும், தலைமை அலுவலகப் பொறுப்பாளருமான அருண் சிங் இது குறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் மாண்புமிகு ஸ்ரீ நிதின் நபின் அவர்கள், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பாஜக மாநில தலைவராக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக-வுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் 11 சதவிகித வாக்குகள் இருப்பதை நிரூபித்துக் காட்டிய பிறகும், அடுத்த ஆண்டே மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அந்தப் பதவிக்கு நயினார் நாகேந்திரன் வந்த பிறகு, கட்சியில் அவர் ஓரங்கட்டப்படுவதாகவும், அதனால்தான் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்பட்டது.
மேலும் அண்ணாமலை தனது பிறந்தநாளான இன்று தனது சமூக வலைதளப் பக்கங்களில், "இன்று தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தனிப்பெரும் கட்சியாக தவெக வெற்றிபெற்று ஆட்சியமைத்த பிறகு, அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்தும் முழுமையாக விலகியிருப்பது தமிழக மற்றும் தேசிய அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன்பொருள், புதிய கட்சிக்கான அறிவிப்பை அண்ணாமலை இன்று வெளியிடக்கூடும் என்று தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















