13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி
தாய் தம்பி தங்கையை காக்க, கடலில் குதித்த 4 மணி நேரம் நீந்திய சிறுவன் ஆஸ்டினை உலகமே ஹீரோவாக கொண்டாடி வரும் நிலையில், அட நான் ஒன்னும் ஹீரோலாம் இல்லங்க என்று அந்த சிறுவன் அளித்துள்ள பேட்டி காண்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..
கடந்த ஜனவரி 30ஆம் தேதி ஆஸ்டின் தனது குடும்பத்தினருடன் குயின்ட்லப் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றிருந்த போது காற்றழுத்த தாழ்வு நிலையால், கடல் மிகுந்த சீற்றத்துடன் இருந்ததால் படகின் துடுப்பு உடைந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற தாய் ஜோன், தனது மூத்த மகனான 13 வயது ஆஸ்டினிடம் அனைவரையும் காக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.
கடும் குளிர், பொங்கி எழுந்த கடல் அலைகள், கீழே வட்டமடித்து கொண்டிருந்த சுராக்கள் என எதையும் பொருட்படுத்தாமல், கடலில் குத்தித்தான் ஆஸ்டின். இந்நிலையில் கடலில் குதித்த நொடியிலிருந்து என்ன நடந்தது என்பதை ஆஸ்டின் விவரித்துள்ளார், அதில் “நான் நீந்த தொடங்கியதும், பலவிதமான நீச்சல் யுக்திகளை கையாண்டேன், முதலில் விரைவாக செல்வதற்காக ஃப்ரீ ஸ்டைல் முறையிலும், பின் கடலுக்குள் சென்று, அலைகளை சமாளிப்பதற்காக பிரெஸ்ட்ஸ்ட்ரோக் முறையையும் பயன்படுத்தினேன். பின்னர் ஒரு கட்டத்தில் மிகவும் சோர்வடைந்த நான் உயிரை காப்பாத்தி கொள்ள சர்வைவல் பேக்ஸ்ட்ரோக் முறையில் நீந்தினேன். குறிப்பாக லைஃப் ஜாக்கெட் என்னுடைய வேகத்துக்கு உதவவில்லை என்பதால், கடைசி நான்கு கிலோமீட்டர் அதனை கழட்டிவிட்டு நீந்தினேன். இது அனைத்தையும் செய்த பின்னும் நான் கரையை அடைய சில மணி நேரங்கள் எடுத்தது. இறுதியாக என் கால் கரையை தொட்ட போது இது நிஜம் தானா உண்மையில் நான் கரையில்தான் நிற்கிறேனா, இது கனவா இல்லை நிஜமா என்று தோன்றியது. ஆனால் இதை செய்ததால் என்னை ஹீரோவாக நினைக்கவில்லை என்னால் என் குடும்பத்தை காக்க என்ன செய்ய முடிந்ததோ அதை தான் செய்தேன்” என்று தெரிவித்துள்ளார் ஆஸ்டின். மேலும் இறுதியாக அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் ஓடி சென்று காவல்துறை அதிகாரிகளிடம் நடந்ததை சொல்லி, என் குடும்பத்தை உயிருடன் மீட்டபோது, அனைவரையும் நான் காப்பாற்றி விட்டேன் என்ற பெரு மகிழ்ச்சி என்னுள் இருந்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள ஆஸ்டினின் தாயார் ஜோன் “துடுப்பை நாங்கள் இழந்து விட்டோம். நேரம் ஆக ஆக என்னுடைய நம்பிக்கையையும் இழந்து கொண்டே இருந்தேன். இருளும் சூழ்ந்து விட்டது, ஒரு வேலை ஆஸ்டின் இதை செய்யவில்லை என்றால், என்ன செய்வது என்று தெரியாமல் நின்றேன். எனக்கு மிகவும் அருமையான நண்பர்கள் உள்ளனர், நான் தவறான முடிவெடுத்துவிட்டால், என்னுடைய இரண்டு குழந்தைகளை அவர்கள் காப்பாற்றுவார்களா என்ற யோசனையும் என்னுள் இருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு பிரச்சனை வாழ்க்கையில் ஏற்பட்டால், உடனே எல்லாம் முடிந்துவிட்டது என்று தேங்கி நிற்காமல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று துணிச்சலான முடிவெடுத்து, அதில் வெற்றியும் கொண்ட ஆஸ்டின் உண்மையிலே நம் அனைவருக்கும் ஹீரோ தான் என்பதில் சந்தேகமில்லை.






















