"வெளியே போ இங்க நிக்காத"வேட்பாளரை விரட்டிய நிர்வாகிகள்..மேலூர் காங்கிரஸ் உட்கட்சி மோதல்
மதுரை மேலூர் தொகுதிக்கு நீண்ட இழுபறிக்கு பின்னர் முன்னாள் எம்.பி விஸ்வநாதனை வேட்பளராக காங்கிரஸ் அறிவித்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சொந்தக் கட்சி நிர்வாகிகளே அவரை விரட்டிய சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
திமுகவுடன் நீண்டா இழுபறிக்குப் பின்னர் 28 இடங்களை வாங்கிய காங்கிரஸ், கட்சிக்குள் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கடந்த வரம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
அதிலும், மதுரை மேலூர் தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்கப்படவில்லை.
பின்னர், அந்தத் தொகுதிக்கு காஞ்சிபுரம் முன்னாள் எம்பி விஸ்வநாதனை நேற்று வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ்.
இந்த முடிவை, "உண்மையான சமூகநீதி பேசுவது மட்டும் அல்ல வாய்ப்பு கொடுப்பதில் உள்ளது" என்று மாணிக்கம் தாகூர் வரவேற்றார்.
இந்த நிலையில், மேலூர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் விஸ்வநாதனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.
முன்னதாக, மேலூர் முழுவதும் அவருக்கெதிராக எதிராக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த நிலையில், இது குறித்து தங்களது கருத்தை தெரிவிக்கும் வகையில் மேலூர் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பை ஏற்படுத்தினர்.
அங்கு, மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் நூர் முகமதுவுடன் வந்த விசுவநாதனும் வந்தார்.
அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் விஸ்வநாதனை வெளியே போ என கோஷமிட்டனர்.
இதனால், அவரும் அங்கிருந்து வெளியேறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய மேலூர் காங்கிரஸ் நிர்வாகிகள், மாணிக்கம் தாகூர் மேலூரில் கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என நினைத்து விஸ்வநாதனை பலிகடா ஆக்கியிருக்கிறார் என்றும், கட்சியை அழிக்கிற வேலையை தான் அவர் செய்கிறார் என்றும் தெரிவித்தனர்
மேலும், சமூக நிதி பேணும் வகையில் மேலூரைச் சேர்ந்த தலித் ஒருவருக்கு சீட் ஒதுக்க வேண்டும், மேலூர் மண் மேலூருக்கே சொந்தம் என்று வலியுறுத்தியினர்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 வாரம் கூட இல்லாத சூழலில், காங்கிரஸ் கட்சிக்குள் தொடர்ந்து உட்கட்சி மோதல் நடப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகவே உள்ளது.























