![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kodi Lingam Temple: சுற்றுலா மட்டுமல்ல பக்தியும்தான்! சுருளி அருவிக்கு மற்றொரு அடையாளமும் இருக்கு..!
Kodi Lingam Temple Suruli Theni Tamil Nadu: சுருளி அருவிக்கு மற்றொரு அடையாளமாக மாறி வரும் பிரசித்திபெற்ற இடம்தான் கோடிலிங்கம் கோவில்.
![Kodi Lingam Temple: சுற்றுலா மட்டுமல்ல பக்தியும்தான்! சுருளி அருவிக்கு மற்றொரு அடையாளமும் இருக்கு..! Theni Tourist Place Suruli Falls Temple Kodi Lingam Temple All You Need to Know TNN Kodi Lingam Temple: சுற்றுலா மட்டுமல்ல பக்தியும்தான்! சுருளி அருவிக்கு மற்றொரு அடையாளமும் இருக்கு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/07/b7ebe0194b6fd145335105f02e3579c71678170168915193_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள கம்பம் அருகே 15 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது சுருளி அருவி. பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் இந்த அருவியில், குளித்தால் வரும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்பார்கள் அருவிக்கு சென்று திரும்புபவர்கள். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதிக்குள் 40 அடி உயரம்கொண்ட இந்த நீர் வீழ்ச்சி, வனப்பகுதியிகளிலிருந்து வரும் தண்ணீர் மூலம் அருவியாக உருவெடுத்துள்ளது.
இந்த அருவி அமைந்துள்ள இடமானது சுற்றுலாத்தலமாக மட்டுமல்லாமல் ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்குகிறது. காரணம் இந்த அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்கும் இத்தளத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிமார்கள் வாழ்ந்து வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. ஆதலால் இறந்த முன்னோர்களுக்கு திதி தற்பணம் போன்ற ஈமச் சடங்குகளை செய்வதற்கு இங்கு கூடும் கூட்டத்திற்கு அளவே இல்லை என்றும் குறிப்பிடலாம். ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாளன்று இறந்த முன்னோர்களுக்கு ஈமச்சடங்கு செய்வதற்கு உள்ளூர் வெளியூர் அல்ல வெளி மாவட்டங்கள் ,வெளிமாநிலங்களில் இருந்து கூட ஏராளமான மக்கள் இங்கு வருவது வழக்கம்.
அப்படி செய்யப்படும் ஈமச் சடங்குகளின் போது இந்த அருவியில் குளித்த, பின்னரே வீடு திரும்பவேண்டும் என்பது வழக்கமாக இருந்துவருகிறது. ஆதலால் இந்த சுருளி அருவி, சுருளி தீர்த்தம் எனவும் அழைக்கப்படுவது வழக்கம். ஆன்மிக ஸ்தலம் என அழைக்கப்படும் இந்த அருவி செல்லும் பகுதிகளில் எல்லாம் பழமையான கோவில்கள் சித்தர்கள் வாழ்ந்த இடங்களாக குறிப்பிடப்படும் இடங்கள் என பல்வேறு ஆன்மீக சம்பந்தப்பட்ட இடங்கள் இருப்பதால் இது திருத்தலமாக கொண்டாடப்படுகிறது.
இப்படி பல்வேறு புகழும், சிறப்புகளும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த சுருளி அருவி சுற்றுலா தலத்திற்கு மற்றொரு சிறப்பாக மாறியுள்ளது. அருவிக்கு செல்லும் வழியில் உள்ள கோடி லிங்கம் என அழைக்கப்படும் கைலாச லிங்க பர்வதவர்த்தினி தபோவனம் கோடி லிங்க பிரதிஷ்டை எனும் கோவில். இந்த கோவிலின் அமைவிடம் சுருளி மலையின் அடிவாரத்தில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இங்கு உள்ள ஒவ்வொரு லிங்க சிலைகளும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வைக்கப்பட்டு வருகிறது.
தற்போது வரை ஆயிரக்கணக்கான லிங்க சிலைகள் வைக்கப்பட்டு பிரமாண்டமாக உள்ளது இக்கோவில். இந்த கோவிலில் போகர் கால நவபாசான லிங்க சிலை உள்ளதாகவும் ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறுகின்றனர். சிவ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்ட இந்த கோவிலில் 18 சித்த ரிஷிமார்களின் சிலைகளை சுமார் 6 அடி என ஒவ்வொரு சிலையும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 1500 பேர் ஒரே நேரத்தில் தியானம் செய்யும் அளவிற்கு 72 அடி உயர தியான லிங்கம் கட்டும் வேலைகளும் நடைபெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் சிவ பெருமானின் லிங்க சிலைகள் என ஆயிரக்கணக்காக காட்சியளிப்பது கோவிலுக்கு வரும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது என தெரிவிக்கின்றனர். சுருளி அருவி இந்த சுற்றுலா தலத்திற்கு மற்றுமொரு அடையாளமாக இந்த கோவில் இடம்பெற்று வருகிறது என அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)