![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Tokyo Paraylmpic 2020: பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் போட்டி: பாலக்-பிரமோத் தோல்வி!
டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலி ஆகிய இருவரும் பங்கேற்றுள்ளனர்.
![Tokyo Paraylmpic 2020: பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் போட்டி: பாலக்-பிரமோத் தோல்வி! Tokyo Paraylmpic 2020: Mixed para Badminton doubles India's Pramod Bhagat and Palak Kohli loss, know in details Tokyo Paraylmpic 2020: பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் போட்டி: பாலக்-பிரமோத் தோல்வி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/01/eaf0c180d915e7ae6e4afccae9166510_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக பேட்மிண்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தடகளத்திற்கு பிறகு இந்திய பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் முக்கியமான விளையாட்டு பேட்மிண்டன் தான். இதில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரர் பிரமோத் பகத், பாலக் கோலி,சுஹேஷ் யேத்திராஜ், மனோஜ் சர்கார் உள்ளிட்ட 7 இந்தியர்கள் பங்கேற்று உள்ளனர். பேட்மிண்டன் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. முதலில் பேட்மிண்டன் குரூப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலி குரூப் பி-யில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஜோடி இன்று தனது முதல் குரூப் போட்டியில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த மசூர் லூகாஸ் மற்றும் நோயல் ஃபௌஸ்டெயின் ஆகியோரை எதிர்த்து விளையாடியது. பிரான்சு ஜோடி பாராலிம்பிக்கில் தரவரிசையில் இரண்டாம் நிலை ஜோடி என்பதால் இந்திய ஜோடி இப்போட்டி பெரிய சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதல் கேமில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்சு ஜோடி வேகமாக புள்ளிகளை சேர்த்தது. 11 நிமிடங்களில் 21-9 என்ற கணக்கில் முதல் கேமை லூகாஸ்-நோயல் ஜோடி கைப்பற்றியது.
இரண்டாவது கேமில் சுதாரித்து கொண்டு ஆடிய பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று வந்தனர். இதனால் இரண்டாவது கேமை 21-15 என்ற கணக்கில் வென்று 1-1 என சமன் செய்தனர். ஆகவே போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது கேம் நடைபெற்றது. அதில் இரண்டு ஜோடிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் 18-18 என புள்ளிகள் பெற்று இருந்தன. இறுதியில் 18 நிமிடங்கள் நடைபெற்ற மூன்றாவது கேமை 21-19 என்ற கணக்கில் பிரான்சு ஜோடி வென்றது. அத்துடன் 21-9,15-21,21-19 என்ற கணக்கில் லூகாஸ்-நோயல் ஜோடி இந்தியாவின் பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலியை தோற்கடித்தனர். இந்திய ஜோடி அடுத்த குரூப் போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோடியை எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று மாலை 5.10 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான எஸ்யூ-5 பிரிவு ஒற்றையர் குரூப் போட்டியில் இந்தியாவின் பாலக் கோலி ஜப்பான் வீராங்கனை சுசுகி அயாகோவை எதிர்த்து விளையாடுகிறார். ஜப்பான் வீராங்கனை டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் தரவரிசையில் முதலாம் நிலை வீராங்கனை என்பதால் இந்தப் போட்டியும் சற்று சவாலான ஒன்றாக கருதப்படுகிறது.
அதேபோல் ஆடவர் பாரா பேட்மிண்டன் எஸ்.எல்-3 பிரிவில் உலக தரவரிசையில் முதல் நிலை வீரரும் 5 முறை உலக சாம்பியனுமான பிரமோத் பகத் இன்று தன்னுடைய முதல் குரூப் போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர் இன்று மாலை 5.50 மணிக்கு நடைபெறும் போட்டியில் மற்றோரு இந்திய வீரரான மனோஜ் சர்காரை எதிர்த்து விளையாட உள்ளார். இரண்டு பேரும் இந்தியர்கள் என்பதால் இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: 10 மீட்டர் ரைஃபிள் கலப்பு துப்பாக்கிச் சுடுதல் : தகுதிச்சுற்றுடன் வெளியேறி இந்தியர்கள் ஏமாற்றம்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)