IPL 2026 Qualifier 1: இரண்டாவது கோப்பைக்காக முதலாவதாக செல்லப்போவது யார்? நாளை யுத்தம் செய்யும் ஆர்சிபி - குஜராத்!
IPL 2026 Qualifier 1: ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத் - ஆர்சிபி அணிகள் நாளை தரம்சாலாவில் மோதுகின்றனர்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி, சன்ரைசர்ஸ், குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளது.
குவாலிஃபயர் 1:
இந்த சூழலில், இறுதிப்போட்டிக்குச் செல்லப்போகும் முதல் அணி யார்? என்பதைத் தீர்மானிக்கும் குவாலிஃபயர் 1 போட்டி நாளை நடக்கிறது. தரம்சாலாவில் நாளை இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் மிகுந்த முனைப்புடன் ஆடுவார்கள். இதனால், நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஆர்சிபி - குஜராத்:
இரு அணிகளைப் பொறுத்தமட்டிலும் அனுபவமும், திறமையும், இளமையும் கலந்த அணியாகவே காணப்படுகிறது. ஆர்சிபி அணியைப் பொறுத்தமட்டில் தொடக்க வீரராக விராட் கோலியுடன் நாளை பில் சால்ட் களமிறங்குவாரா? அல்லது வெங்கடேஷ் ஐயர் களமிறங்குவாரா? என்ற கேள்வி உள்ளது.
பேட்டிங் பட்டாளம்:
சால்ட் அணியின் ஆஸ்தான வீரராக இருந்தாலும், அவர் காயத்தில் இருந்து மீண்டு தற்போதுதான் அணிக்கு திரும்பியுள்ளார். வெங்கடேஷ் ஐயர் தனக்கு சரியாக கிடைத்த 2 வாய்ப்புகளையும் அற்புதமாக பயன்படுத்தி தன்னை நிரூபித்துள்ளார். இதனால், அவருக்கே வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. விராட் கோலி, வெங்கடேஷ் ஐயர், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா என ஆர்சிபி-யின் பேட்டிங் ஆர்டர் மிகவும் வலுவாக உள்ளது. இவர்கள் தங்களது முழு திறமையும் காட்ட வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.
குஜராத் அணியும் இளமையும், திறமையும் கலந்த அணியாக உள்ளது. கேப்டன் கில் - சாய் சுதர்சன் அந்த அணியின் தூணாக உள்ளனர். இவர்களின் திறமையான பார்ட்னர்ஷிப் நாளைய போட்டியில் தொடர வேண்டியது அந்த அணிக்கு அவசியம் ஆகும். பட்லர் அந்த அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளார். இவர்களின் டாப் ஆர்டர் கலைந்தால் அந்த அணி ஸ்தம்பித்து விடும். மிடில் ஆர்டரில் வாஷிங்டன் சுந்தர், நிஷாந்த் சிந்து, ஹோல்டர் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.
அசத்த காத்திருக்கும் ஆல்ரவுண்டர்கள்:
ஆர்சிபி அணியில் ஆல்ரவுண்டர்களாக குருணல் பாண்ட்யா, ஷெப்பர்ட் உள்ளனர். குறிப்பாக, குருணல் பாண்ட்யா அந்த அணியின் நம்பிக்கையாக உள்ளார். குஜராத் அணிக்கு ரஷீத் கான், ஹோல்டர் ஆல்ரவுண்டர்களாக உள்ளனர்.
வெற்றியைத் தீர்மானிக்கும் பந்துவீச்சு:
சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தும் அணியே இறுதிப்போட்டிக்குச் செல்வதை தீர்மானிக்கும் அணியாக திகழும். தரம்சாலா பேட்டிங்கிற்கு ஏற்ற மைதானம் என்பதால் பந்துவீச்சில் அசத்தும் அணி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக செல்லும். ஆர்சிபி அணியில் பந்துவீச்சில் புவனேஷ்வர், ஹேசில்வுட், ரஷீக் சலார், ஜேக்கப் டஃபி உள்ளனர். மைதானத்தைப் பொறுத்து நான்கு பேரும் களமிறங்க வாய்ப்பு உள்ளது. சுழலில் க்ருணல் பாண்ட்யா, சுயாஷ் சர்மா உள்ளனர்.
குஜராத் அணியைப் பொறுத்தமட்டில் முகமது சிராஜ், ரபாடா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷத் கான் அந்த அணிக்கு வேகப்பந்துவீச்சில் பலமாக உள்ளனர். சுழலில் ரஷீத்கான் பலமாக உள்ளார்.
விறுவிறுப்பு:
இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் இறுதிப்போட்டிக்குச் செல்ல இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்றாலும், இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குச் செல்லவே இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டி மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ட்ரெண்டிங் செய்திகள்



















