”யாரும் மதிக்கல, சப்போர்டும் பண்ணல” - கிரிக்கெட்டில் இருந்து விலகியதற்கான காரணத்தை சொன்ன யுவராஜ்
Yuvraj Singh Retirenment: இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? என்ற காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Yuvraj Singh Retirenment: மதிக்காததை போன்றும், மரியாதை இல்லாததை போன்றும் உணர்ந்ததாலே கிரிக்கெட்டில் இருந்து விலகியதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? -யுவராஜ்
இந்திய அணி 2007ம் ஆண்டு தனது முதல் டி20 உலகக் கோப்பையை வென்றதற்கும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதற்கும், நட்சத்திர ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் மிக முக்கிய பங்கு வகித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்தவர் யாரும் எதிர்பாராத விதமாக, கடந்த 2019ம் ஆண்டு ஜுன் மாதம், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறாததை தொடர்ந்து, சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக யுவராஜ் சிங் அறிவித்தார். இந்நிலையில், தனது முடிவுக்கான காரணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
என்னை யாரும் மதிக்கவில்லை - யுவராஜ் சிங்
இந்திய அணியின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான சானிய மிர்சா உடனான பாட்காஸ்டில், 44 வயதான யுவராஜ் சிங் பங்கேற்றார். அப்போது, தனக்கு போதிய மரியாதையும், ஆதரவும் கிடைக்காதது, தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் மகிழ்ச்சியை வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். அதன்படி, “"எனது விளையாட்டை நான் ரசிக்கவில்லை. கிரிக்கெட் விளையாடும்போது எனக்கு அது பிடிக்கவில்லை, ஏன் விளையாடுகிறேன் என்று எனக்குத் தோன்றியது. எனக்கு ஆதரவு இல்லை, மரியாதை இல்லை. பின்பு எதற்காக நான் ஏன் இதைச் செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன். எனக்கு பிடிக்காத ஒன்றை நான் ஏன் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்? நான் ஏன் விளையாட வேண்டும்? எதை நிரூபிக்க வேண்டும்? இதை விட அதிகமாக மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ என்னால் செய்ய முடியாது, அது என்னை காயப்படுத்தியது. இதன் விளைவாக நான் விளையாடுவதை நிறுத்திய பிறகே, நான் மீண்டும் நானாகவே இருந்தேன்" என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

டி20 போட்டிகளின் அடையாளம்
இந்திய கிரிக்கெட் அணி இன்று கொண்டுள்ள வலுவான மற்றும் அதிரடியான மனநிலைக்கு வித்திட்டவர்களில் யுவராஜ் சிங் மிக முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததோடு, 12 பந்துகளில் அரைசதம் விளாசிய அவரது சாதனை இன்றளவும் முறியடிக்கப்படவில்லை. உடல்நிலை மோசமாகி ஆடுகளத்திலேயே வாந்தி எடுத்தபோதும் நிலைத்து நின்று ஆடி, ஒருநாள் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற, கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவை நிறைவேற்றி கொடுத்தவர். புற்றுநோய் மட்டும் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை பாதிக்காமல் இருந்து இருந்தால், இந்திய அணிக்காக அவர் மேலும் பல சாதனைகளை படைத்து இருப்பார் என்பதே இன்றளவும் ரசிகர்களின் நம்பிக்கையாகும். அத்தகைய வீரர், இப்படி ஒரு மோசமான அனுபவத்துடன் கிரிக்கெட்டில் இருந்து விலகியதாக கூறி இருப்பது, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.





















