தொடர் விடுமுறை எதிரொலி... பழனி முருகன் கோயில் வருவாய் ரூ.5 கோடியை தாண்டியது
பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ஐந்தரை கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விழாக்காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில், கோயில் வளாகத்தில் பல்வேறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதில் உள்ள பணம், தங்கப் பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பழனி முருகன் கோயிலில் நேற்று , இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. சித்திரை மாத திருவிழா மற்றும் பள்ளி, கல்லூரிகள் தொடர் விடுமுறை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் உண்டியல்கள் நிரம்பி வழிந்தது. இதனை முன்னிட்டு கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் கோயில் பணியாளர்கள் வங்கி ஊழியர்கள் கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக ரூ.5 கோடியே 42 லட்சத்து 62 ஆயிரத்து 088 ரூபாயும் , தங்கமாக 1131 கிராம், வெள்ளியாக 21,324 கிராம், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இத்தாலி உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி 1610 நோட்டுகள் கிடைக்கப்பெற்றது. மேலும் பக்தர்கள் செலுத்திய தங்கம் வெள்ளியிலான வேல் தாலிச்செயின் தங்கக்காசு சாமி சிலைகள் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்தன.





















