ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே இந்த கோயிலில் இதற்கு அனுமதி...என்ன தெரியுமா...?
பக்தர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, அசுபதி நட்சத்திரத்தன்று, கோயில் தீர்த்தக் கிணற்றில் புனித நீராட அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அசுபதி தீர்த்தவாரி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருமெய்ஞானம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று அசுபதி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு அசுபதி தீர்த்தவாரி திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் தீர்த்த கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து புனிதநீராடினர்.
பிரம்மன் உயிர் பெற்ற புனிதத் தலம்
திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில், பிரம்மன் உயிர் பெற்ற புனிதத் தலமாக சிறப்புமிக்கது. இத்தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அசுபதி தீர்த்தவாரி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, பிரம்மபுரீஸ்வரர் கோயில் தீர்த்தக் கிணறு, புனித காசி தீர்த்ததிற்கு இணையாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பக்தர்களுக்கு அனுமதி
பக்தர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, அசுபதி நட்சத்திரத்தன்று, கோயில் தீர்த்தக் கிணற்றில் புனித நீராட அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால், இந்த நாளை மிகுந்த எதிர்பார்ப்புடன் பக்தர்கள் காத்திருந்து பக்தியுடன் புனிதநீராடி வழிபாடு மேற்கொள்கின்றனர்.
பல்லாயிரக்கணக்கானோர் பக்தர்கள் புனித நீராடல்
இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்ற அசுபதி தீர்த்தவாரி விழாவில் அதிகாலையிலேயே கோயிலுக்கு திரளான பக்தர்கள் வருகைதந்து, தீர்த்தக் கிணற்றிலிருந்து நீரை எடுத்து புனித நீராடினர். பின்னர், அந்த புனித நீர் கொண்டு பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, பிரம்மபுரீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்திற்காக பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, பல்வேறு வாசனை திரவியங்கள் பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து, இறைவனுக்கு அலங்காரம் செய்து, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள்: தமிழ்நாட்டை பெருமைபடுத்திய ராஜ் தாக்கரே!
தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பலர் பங்கேற்பு
தீர்த்தவாரி திருவிழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை ஒட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.