மயிலாடுதுறையில் அமர்நாத் பனி லிங்கம் தரிசனம்! 6 அடி உயரத்தில் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய அதிசயம்!
மயிலாடுதுறை அறுபத்துமூவர்பேட்டை சப்த மாதா ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அமைக்கப்பட்ட 6 அடி உயர அமர்நாத் பனி லிங்கத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை: மகா சிவராத்திரி விழாவினை முன்னிட்டு, மயிலாடுதுறையில் காஷ்மீர் அமர்நாத் குகையில் தோன்றுவதைப் போன்றே 6 அடி உயரத்திலான பனி லிங்கம் அமைக்கப்பட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடு, பல்லாயிரக்கணக்கான பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
அமர்நாத் தரிசனம் மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை மாவட்டம், அறுபத்துமூவர்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சப்த மாதா ஆலய வளாகம் சிவ நாமா ஒளியால் எதிரொலித்தது. ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று வட மாநிலங்களுக்குச் சென்று அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க இயலாத பக்தர்களுக்காக, அதே போன்றதொரு தத்ரூப பனி லிங்கத்தை அமைப்பது இப்பகுதி மக்களின் வழக்கமாக உள்ளது.
அந்த வகையில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இந்த ஆண்டும் 13-வது முறையாகத் தொடர்ந்து மிகப்பிரம்மாண்டமான முறையில் பனி லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுமார் 6 அடி உயரத்தில் தூய வெண்ணிறப் பனிக்கட்டிகளால் செதுக்கப்பட்ட இந்த சிவலிங்கம், காண்போரை வியக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது.
கோ பூஜை முதல் அசுவ பூஜை வரை
மகா சிவராத்திரி தினமான இன்று மாலை, இந்த பனி லிங்கத்திற்குப் பல்வேறு மலர் மாலைகள் மற்றும் அபூர்வமான தாமரை மணி மாலைகள் சாற்றப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டன. சிவ வழிபாட்டின் தொடக்கமாக, மங்கலப் பொருட்களாகக் கருதப்படும் கோ பூஜை (பசு வழிபாடு) மற்றும் அசுவ பூஜை (குதிரை வழிபாடு) மிகவும் விமரிசையாக நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, பனி லிங்கத்திற்குச் சிவபெருமானுக்குப் மிகவும் உகந்த வில்வ இலைகள் மற்றும் வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன. வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் தேவாரம் பாட, சிவனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என முழக்கமிட்டது அப்பகுதி முழுவதையும் கைலாயமாக மாற்றியது.
"காஷ்மீர் வரை சென்று அமர்நாத் பனி லிங்கத்தைத் தரிசிக்க முடியாத எங்களைப் போன்ற சாமானிய மக்களுக்கு, மயிலாடுதுறையிலேயே இந்த தரிசனம் கிடைப்பது பெரும் பாக்கியம்" என வழிபாட்டிற்கு வந்திருந்த பெண் பக்தர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சிவனடியார்கள் ஆசி
இந்த விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக, ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு வருகை தந்திருந்த ஏராளமான சிவனடியார்கள், பனி லிங்க வழிபாட்டில் பங்கேற்றனர். அவர்கள் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கி அருளாசி வழங்கினர். சிவராத்திரி முழுவதும் கண் விழித்து இறைவனைத் தொழ வந்திருந்த பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும், பிரசாதங்களும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் சார்பில் வழங்கப்பட்டன.
13 ஆண்டு காலத் தொடர்ச்சி
கடந்த 13 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த பனி லிங்க வழிபாட்டை பாஜக ஒருங்கிணைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பனி லிங்கத்தின் உயரம் மற்றும் அலங்காரங்கள் அதிகரிக்கப்பட்டு வருவதால், மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்தனர்.
அறுபத்துமூவர்பேட்டை சப்த மாதா ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த பனி லிங்கத் திருவிழா, மயிலாடுதுறையில் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களின் உச்சகட்டமாக அமைந்தது. நள்ளிரவு வரை நீண்ட இந்த வழிபாட்டில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பக்தி பெருக்கில் பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர்.
























