Maha Shivaratri 2026: நாளை மகாசிவராத்திரி.. களைகட்டிய சிவன் கோயில்கள்! பரவசத்தில் பக்தர்கள்!
Maha Shivaratri 2026: மகாசிவராத்திரி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்கள் களைகட்டி காணப்படுகிறது.

Maha Shivaratri 2026: அனைத்திற்கும் ஆதியாக இந்து மதத்தினரால் போற்றி வணங்கப்படுபவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்று மகாசிவராத்திரி.
நாளை மகாசிவராத்திரி:
மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதர்த்தி திதி இரவு மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான மகா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 15ம் தேதி கொண்டாடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, மகாசிவராத்திரி நாளை கொண்டாடப்படுகிறது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு கடந்த சில தினங்களாகவே சிவாலயங்கள் களைகட்டி காணப்படுகிறது. நாளை மகா சிவராத்திரிக்காக உலகெங்கும் உள்ள சிவாலயங்கள் தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களிலும் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
களைகட்டும் சிவாலயங்கள்:
புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருவானைக்காவல் சிவன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதபுரசுவாமி கோயில், ராமநாதபுரம் உத்தரகோசமங்கை சிவன் கோயில் என தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சிவாலயங்கள் உள்பட அனைத்து சிவ வழிபாட்டு தலங்களிலும் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் இரவு நேரத்தில் தரிசனத்திற்காக குவிவார்கள் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் அதிகம் குவியும் கோயில்களில் கோயில் நிர்வாகங்களும், இந்து சமய அறநிலையத்துறையும் மேற்கொண்டு வருகிறது. சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நாளை கோயில்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னையிலும் ஏற்பாடுகள் தீவிரம்:
சென்னையிலும் புகழ்பெற்ற சிவாலயங்களான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி வேங்கீஸ்வரர் கோயில், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், பாடி திருவல்லீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜாசுவாமி கோயில் என சென்னையில் உள்ள அனைத்து சிவன் கோயிலிலும் பக்தர்கள் பன்மடங்கு குவிவார்கள் என்று கருதப்படுகிறது.
இதனால், பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கும், கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் வந்து செல்வதற்கும் ஏதுவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோயில்களுக்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் நாளை இயக்கப்பட உள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
சென்னை உள்பட பெருநகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மகாசிவராத்திரியில் சிவன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். சிவாலயங்கள் மட்டுமின்றி மற்ற கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.
இந்த மகாசிவராத்திரி பல காரணங்களுக்காக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. சிவபெருமானும், சக்திதேவியும் இணைந்த புனித இரவே மகா சிவராத்திரி என்றும், சிவபெருமானின் அடியையும், முடியையும் காண முயன்ற விஷ்ணு - பிரம்மாவின் அகந்தையை சிவபெருமான் ஜோதி வடிவமாக தோன்றி அழித்த இரவே மகாசிவராத்திரி என்றும், சிவபெருமான் தனது சிவ தாண்டவ நடனத்தை ஆடிய இரவே மகா சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. மகாசிவராத்திரி நாளில் சிவ பக்தர்கள் விரதமிருந்து தங்களது வேண்டிக்கொள்வது வழக்கம் ஆகும்.





















