கார்த்திகை முதல் நாள்: பசுபதீஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்! சபரிமலை தரிசனம் குறித்த முக்கிய அறிவிப்பு!
சபரிமலை கோயிலுக்கு தினமும் ஆன்லைன் மூலம் 70,000 பேரும் ஸ்பாட் புக்கிங் மூலம் 20,000 பேரும் அனுமதிக்கப்படுவார்கள்.

கார்த்திகை முதல் நாளான இன்று கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஐயப்பன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தை மேற்கொண்டனர்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் பல்வேறு ஐயப்பன் ஆலயங்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து 48 நாள் 1 மண்டலம் அல்லது 24 நாள் 1/2 மண்டலம் அல்லது 12 நாட்கள் 1/4 மண்டலம் என தங்களது விரதத்தை மேற்கொண்டு அதன் தொடர்ச்சியாக இருமுடி கட்டி கேரளாவில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று தங்களது நேர்த்தி கடனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று கரூர் நகரப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் குளித்து நீராடி ஆலயத்தில் உள்ள குருசாமியிடம் மாலை அணிவித்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து ஆலயத்தில் வீற்றிருக்கும் மஞ்சள் மாதா, ஐயப்பன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.
சபரிமலை கோயில்
சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின்னர், இன்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து சன்னிதானத்திற்கும் தீபம் ஏற்றினார். இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியதை தொடர்ந்து 41 நாட்கள் பூஜைகள் நடைபெற உள்ளது. நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
சபரிமலை கோயிலுக்கு தினமும் ஆன்லைன் மூலம் 70,000 பேரும் ஸ்பாட் புக்கிங் மூலம் 20,000 பேரும் அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜையுடன் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைதிறக்கப்படுகிறது.





















