Russia Ukraine War: ரஷ்யாவுக்கு தண்ணி காட்டும் உக்ரைன்; போர்களத்தில் புதிய யுக்தி; அதிரவிடும் ரோபோ ஃபைட்டர்ஸ்
Ukraine Robot Warriors: ரஷ்யா - உக்ரைன் போர் 4 ஆண்டுகளை கடந்த நிலையில், தற்போது போர்க்களத்தின் யுக்தியையே மாற்றியுள்ளது உக்ரைன். ஏற்கனவே ஏராளமான வீரர்களை இழந்த உக்ரைன் இப்போது ரோபோ வீரர்களை களமிறக்கியுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர் தற்போது நான்கு ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த போரில் தற்போது புதிய யுக்தியாக, ரோபோக்கள் மற்றும் ஆளில்லா இயந்திரங்களை களமிறகியுள்ளது உக்ரைன். இதன் காரணமாக ரஷ்யா அதிர்ச்சியடைந்துள்ளது.
ரோபோக்கள் எப்படி செயல்படுகின்றன.?
ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளது உக்ரைன். இதைத் தொடர்ந்து, ஆளில்லா அமைப்புகளின் பயன்பாட்டை உக்ரைன் ராணுவம் விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது. போரில், அதிக அளவில் பதற்றம் நிலவும் எல்லைப் பகுதிகளுக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்வதற்காக ரோபோக்கள் மற்றும் ட்ரோன்களை உக்ரைன் ராணுவம் பயன்படுத்தி வருகிறது.
இந்த ரோபோக்கள், எல்லைக்கு அப்பால் தோண்டப்பட்டுள்ள ஆழமான குழிகள் மற்றும் பலத்த கண்காணிப்பு நிலவும் ரஷ்யா எல்லைகள் வழியாக சென்று, இலக்கை அடைந்ததும், அதில் நிரப்பப்பட்ட வெடிபொருட்களை வெடிக்கச் செய்கின்றன.
அதோடு, இந்த ரோபோக்களை போர்க்களத்திற்கு பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்து, மனிதர்களால் சுலபமாக இயக்கி வழிநடத்த முடியும். இதன்மூலம், கணிசமான அளவில் ராணுவ வீரர்களின் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என உக்ரைன் கூறுகிறது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுவது என்ன.?
இது குறித்து பேசியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த ஆண்டின் தொடக்கம் முதல், 22,000-த்திற்கும் அதிகமாக ஆளில்லா இயந்திரங்களை உக்ரைன் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு, ஒரு ராணுவ வீரரைக் கூட போர்க்களத்திற்கு அனுப்பாமல், ரோபோக்கள் மற்றும் ட்ரோன்களை வைத்தே, ஒரு ரஷ்யா நிலையை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், போர் முனைகளில் வெடிபொருட்கள், உணவு, தண்ணீர் போன்றவற்றை கொண்டு செல்லவும், மோதலில் காயமடைந்த வீரர்களை அழைத்துச் செல்லவும், உளவுப் பணிகளை மேற்கொள்ளவும், ஆளில்லா ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
போர்க்களத்தில் திணறி வரும் ரஷ்ய வீரர்கள்
போரின்போது, ரஷ்ய வீரர்கள் உக்ரைனின் இந்த ஆயுதங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. மேலும், வெடிகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் இந்த ரோபோக்களுக்கு, ‘சைலண்ட் டெத்‘ என்று ரஷ்ய வீரர்களே பெயர் சூட்டியுள்ளதாக உக்ரைன் ராணுவ வீரர்கள் கூறுகின்றனர்.
இந்த ரோபோக்களும், இயந்திரங்களும் எந்தவித சப்தத்தையும் ஏற்படுத்தாமல் அமைதியாக நகர்வதால், சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு வந்த பிறகுதான், அவற்றின் சப்தத்தை ரஷ்ய வீரர்களால் கேட்க முடியும். ஆனால், இந்த தூரம் அபாய எல்லைக்குள் வந்துவிடும் என்று உக்ரைன் வீரர்கள் கூறுகின்றனர்.
இந்த ரோபோக்கள் மற்றும் ஆளில்லா இயந்திரங்கள் மூலம், மாதம் தோறம் சுமார் 35,000 ரஷ்ய வீரர்களுக்கு உயிரிழப்போ அல்லது காயத்தையோ ஏற்படுத்தும் இலக்கை உக்ரைன் நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் போரில், சிறிய நாடான உக்ரைன், ஏராளமான உயிரிழப்புகளை சந்தித்துள்ளதால், இந்த புதிய யுக்தியை தற்போது கடைபிடிக்கிறது. இதனால், போரின் போக்கே தற்போது மாற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஈரான் உடனான போரால், உக்ரைனுக்கான உதவிகளை அமெரிக்காவால் சரிவர வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இதனை பயன்படுத்தி உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் இந்த முடிவால், ரஷ்யாவிற்கு பெருமளவில் பின்னடைவு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















