America Russia Ukraine Talks: போருக்கு முடிவு கிடைக்குமா.? ரஷ்யா-உக்ரைன்-அமெரிக்கா இன்று முதல் முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை
ஆண்டுக் கணக்கில் நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும் நிலையில், முதல் முறையாக இன்று அமெரிக்கா உடன் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே, தொழில்நுட்ப மட்டத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது. டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில், தனது உரைக்குப் பிறகு நடந்த ஒரு குழு விவாதத்தின் போது, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தையிலாவது முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் இடையே எழுந்துள்ளது.
ஜெலன்ஸ்கி கூறியது என்ன.?
சுவிட்சர்லாந்தில், டாவோஸில் நேற்று நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றபோது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின் போது, ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பு ஒரு ‘நல்ல‘ விவாதம் என்றும், நேர்மறையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
அதோடு, உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே தொழில்நுட்ப மட்டத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளதாக அறிவிப்பையும் வெளியிட்டார். இது உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான முதல் முத்தரப்பு சந்திப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இது போரை முடிவுக்கு கொண்டுவரும் என்று நம்பிக்கையும் தெரிவித்தார்.
மேலும், பிற நாடுகளின் அதிபர்களைப் போல், தானும் தனது நாட்டின் நலனை பாதுகாக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி கூறினார். அதோடு, ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த போரில் அந்நாடு வெற்றி பெறாது என்றும் கூறினார். ரஷ்யா போரை நிறுத்துமா என்பது அவர்களின் விருப்பம், ஆனால், உக்ரைன் நிச்சயம் போரை நிறுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
“ஐரோப்பா அமெரிக்காவை நம்பி இருக்கிறது“
தொடர்ந்து, ஐரோப்பா அதன் பாதுகாப்பிற்காக அமெரிக்காவை அதிகம் நம்பியுள்ளது என்றும், கண்டத்திற்கு தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளக்கூடிய அதன் சொந்த ஆயுதப் படைகள் தேவை என்றும் ஜெலென்ஸ்கி கூறினார். இது குறித்து கூறிய அவர், "ஐரோப்பாவிற்கு இன்று ஐரோப்பாவை உண்மையிலேயே பாதுகாக்கக்கூடிய ஒன்றுபட்ட ஆயுதப் படைகள் தேவை. ஆபத்து வந்தால், நேட்டோ செயல்படும் என்ற நம்பிக்கையை மட்டுமே ஐரோப்பா நம்பியுள்ளது. ஆனால், கூட்டணியை யாரும் உண்மையில் செயல்பாட்டில் பார்த்ததில்லை" என்று கூறினார்.
மேலும், "அமெரிக்கா செயல்படும், அது ஒதுங்கி நிற்காது, உதவும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே தற்போது நேட்டோ உள்ளது" என்றும், "ஆனால் அப்படி நடக்கவில்லை என்றால் என்ன செய்வது.? என்று கேள்வி எழுப்பிய அவர், “என்னை நம்புங்கள், இந்தக் கேள்வி ஒவ்வொரு ஐரோப்பியத் தலைவரின் மனதிலும் எல்லா இடங்களிலும் இருக்கிறது." என்றும் குறிப்பிட்டார்.
இது ஒருபுறமிருக்க, பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர், இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு வருமா என்பதே, உலக நாடுகளின் தற்போதைய எதிர்பார்ப்பு.























