Trump Vs Iran: “யுரேனியத்த ஒப்படைங்க, இல்லைன்னா அழிச்சுடுங்க“; ஈரான் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் ட்ரம்ப்
US Iran War: கத்தாரில் மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையே ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் போட்டுள்ள ஒரு பதிவில், டெஹ்ரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு அமெரிக்காவிற்கு மாற்றப்பட வேண்டும் அல்லது சர்வதேச மேற்பார்வையின் கீழ் அழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, ஈரான் மீது மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ட்ரம்ப் போட்ட பதிவு என்ன.?
இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் போட்ட கடுமையான பதிவில், யுரேனியம் கையிருப்பை “அணுத்தூள்” என்று கூறி, அது “உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு, தாயகம் கொண்டுவரப்பட்டு அழிக்கப்பட வேண்டும் அல்லது, முன்னுரிமையாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசுடன் ஒருங்கிணைந்து, இருக்கும் இடத்திலேயே அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றொரு இடத்தில் அழிக்கப்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
அதோடு, இந்த செயல்முறை சர்வதேச கண்காணிப்பின் கீழ் நடைபெற வேண்டும் என்றும், அணுசக்தி ஆணையமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு அதிகார அமைப்போ அப்பொருளை அழிப்பதையோ அல்லது மாற்றுவதையோ மேற்பார்வையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்
தி நியூயார்க் டைம்ஸின் சமீபத்திய செய்திகளின்படி , மத்திய கிழக்கில் பதற்றங்களை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட, அமெரிக்க ஆதரவுடனான ஒரு பரந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பின் சில பகுதிகளை விட்டுக்கொடுக்க தற்காலிக விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பல மாதங்களாக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்த முன்னேற்றம் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக கருதப்படுகிறது. இருப்பினும், குறிப்பாக தடைகளை தளர்த்துவது மற்றும் அணுசக்தி தொடர்பான உறுதிமொழிகள் குறித்த முக்கிய கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒப்பந்தத்தின் கட்டமைப்பு குறித்த சர்ச்சைகள் மற்றும் இரு தரப்பினரின் முரண்பட்ட எதிர்பார்ப்புகள் ஆகியவை, ஒரு விரிவான ஒப்பந்தத்தை நோக்கிய முன்னேற்றத்தை தாமதப்படுத்தியதாக சிஎன்என் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.
முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்த கத்தார்
திங்களன்று கத்தாரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், ஈரானின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்கள் பங்கேற்றதை ஒரு நேர்மறையான அறிகுறி என கூறியுள்ள மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர், வாஷிங்டனுக்கும் டெஹ்ரானுக்கும் இடையிலான ராஜதந்திர மத்தியஸ்தராக தோஹாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே, ஈரானிய அதிகாரிகள் பல முனைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டாலும், உடனடியாக திருப்புமுனை ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர். அது குறித்து தெரிவித்த ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகெய், “விவாதத் தலைப்புகளில் பெரும்பகுதி குறித்து நாங்கள் முடிவுகளுக்கு வந்துள்ளோம் என்பது உண்மைதான், ஆனால், இது ஒரு உடனடி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் என்பதை குறிக்கிறது என்று யாரும் உரிமை கோர முடியாது. அமெரிக்க அதிகாரிகளின் நிலைப்பாடுகளில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள், ஒவ்வொரு பேச்சுவார்த்தையையும் சிக்கலாக்குகின்றன,” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில், தற்போது ஈரான் மீது அமெரிக்கா ஒரு தாக்குதலை நடத்தியுள்ளதால், பேச்சுவார்த்தைகளின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் போர் வெடித்துவிடுமோ என்ற அச்சம் ஏற்கனவே நிலவும் சூழலில், தற்போது என்ன நடக்குமோ என உலகமே எதிர்பார்த்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















