Trump Vs Hamas: ட்ரம்ப் கொடுத்த திட்டம்; நிராகரித்த ஹமாஸ், பிடியை இறுக்கும் இஸ்ரேல்; என்ன நடக்கப் போகுதோ.?!
இஸ்ரேல்-காசா போர் நிறுத்தத்திற்கு 20 அம்ச அமைதித் திட்டத்தை ட்ரம்ப் வழங்கிய நிலையில், அதனை ஏற்க மறுத்து, திருத்தங்களை கேட்கிறது ஹமாஸ். மறுபுறம், இஸ்ரேல் தனது பிடியை இறுக்கி வருகிறது. என்ன நடக்கும்.?

இஸ்ரேல்-காசா போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் ட்ரம்ப், 20 அம்ச அமைதித் திட்டத்தை முன்மொழிந்ததோடு, இஸ்ரேல் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் அறிவித்தார். ஆனால், தற்போது ஹமாஸ் இந்த திட்டத்தை நிராகரித்து, அதில் திருத்தங்களை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, காசாவில் தனது பிடியை இறுக்கி வருகிறது இஸ்ரேல். அடுத்து என்ன நடக்கும்.?
ட்ரம்ப் முன்மொழிந்த திட்டம் - ஒப்புக்கொண்ட நெதன்யாகு
சில நாட்களுக்கு முன் வெள்ளை மாளிகையில், ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. இந்த சந்திப்பிற்குப் பின் பேசிய ட்ரம்ப், காசாவுக்கான தனது 20 அம்சத் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்தார். அதோடு, பாலஸ்தீன குழுவான ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தால், போராளிக் குழுவை அழிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் "முழு ஆதரவு" இருக்கும் என்று எச்சரித்தார்.
அதோடு, மற்ற அனைவரும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால், எங்களுக்கு நேர்மறையான பதில் கிடைக்கும் என்று நான் உணர்கிறேன்," என்று நெதன்யாகு உடனான சந்திப்பிற்குப் பின் ட்ரம்ப் கூறினார்.
ட்ரம்ப் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால், ஹமாஸால் பிடிக்கப்பட்ட கடைசி பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறப்படும் போது, "போர் உடனடியாக முடிவடையும்" என்று 20 அம்சத் திட்டம் கூறுகிறது. அந்த ஆரம்ப காலகட்டத்தில், போர் நிறுத்தம் இருக்கும்.
- தற்காலிக சர்வதேச உறுதிப்படுத்துதல் படை மற்றும் ட்ரம்ப் தலைமையிலான ஒரு இடைநிலை அதிகாரத்தை உருவாக்குவது.
- இந்த ஒப்பந்தம், ஹமாஸ் போராளிகளை முழுமையாக நிராயுதபாணியாக்க வேண்டும் மற்றும் அரசாங்கத்தில் எதிர்கால பாதிரங்களில் இருந்து விலக்கப்பட வேண்டும். இருப்பினும், அமைதியான சகவாழ்வுக்கு ஒப்புக்கொண்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.
- இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்பட்டபின், உதவி மற்றும் முதலீடுகளுக்காக எல்லை திறக்கப்படும்.
- ட்ரம்பின் முந்தைய வெளிப்படையான இலக்குகளிலிருந்து ஒரு முக்கியமான மாற்றமாக, பாலஸ்தீனியர்கள் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள். அதற்கு பதிலாக, "மக்கள் தங்குவதை ஊக்குவிப்போம். மேலும், சிறந்த காசாவைக் கட்டியெழுப்ப அவர்களுக்கு வாய்ப்பளிப்படும்.
திட்டத்தை நிராகரித்து திருத்தங்களை கேட்கும் ஹமாஸ்
இந்நிலையில், ட்ரம்ப்பின் இந்த திட்டத்தை ஹமாஸ் நிராகரித்து, திருத்தங்களை கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஹமாஸ் நிராயுதபாணியாக வேண்டும், ஆயுதக் கிடங்குகளை அகற்ற வேண்டும், காசாவிற்குள் ஒரு சர்வதேச நிலைப்படுத்துதல் படையை நிறுவுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ள ஷரத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அவற்றை திருத்த வேண்டும் எனவும் ஹமாஸ் கோருவதாக கூறப்படுகிறது.
மேலும், பாலஸ்தீன அரசுக்கான உத்தரவாதங்களையும் ஹமாஸ் கோருவதாகவும், திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க 2, 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ட்ரம்ப்போ, ஹமாசிற்கு 4 நட்கள் தான் அவகாசம் கொடுத்துள்ளார்.
காசாவில் பிடியை இறுக்கும் இஸ்ரேல்
இதனிடையே, ட்ரம்ப் கொடுத்த திட்டத்தை ஹமாஸ் நிராகரிக்கக் கூடும் என்று ஏற்கனவே கருதியதால், காசா நகரைச் சுற்றி தனது ராணுவ முற்றுகையை இறுக்கி வருகிறது இஸ்ரேல்.
அதோடு, காசாவில் வாழும் மக்களுக்கு ‘இறுதி எச்சரிக்கை‘யையும் அது விடுத்துள்ளது. தங்களது தாக்குதல் தீவிரமடைவதற்குள் மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் கேட்டுககொண்டுள்ளது.
இதுதான் காசா மக்களுக்கான இறுதி எச்சரிக்கை என்றும், அங்குள்ள மக்களை தெற்கு காசா பகுதிக்கு இடம்பெயற இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறி, இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனால், காசாவில் என்ன நடக்கப் போகிறது என்ற அச்சம் எழுந்துள்ளது. ஹமாசிற்கு ஏற்கனவே ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது அவரது ஒப்பந்தம் கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஹமாசிற்கு சோகமான முடிவு ஏற்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அவர்கள் அழிக்கப்படுவார்களா அல்லது அவர்கள் கேட்ட திருத்தத்தை ட்ரம்ப் மேற்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், உலகம் முழுவதும் இந்த விவகாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















