Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
அமெரிக்க தேர்தல் விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டுவரும் நிர்வாக உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். விதிகளில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது தெரியுமா.?

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அரங்கேறிவரும் அதிரடிகளின் உச்சமாக, அந்நாட்டு தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்கும் வகையில் மாற்றம் கொண்டுவருவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அப்படி என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.? பார்க்கலாம்...
தேர்தல் விதிமுறைகளில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் என்ன.?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள உத்தரவில், புதிய விதிமுறைகளின்படி வாக்காளர்கள் வாக்கு செலுத்த என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும், தேர்தல் நாளில் அனைவருக்கும் வாக்குச்சீட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பல விஷயங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி,
- இனி தேர்தலில் வாக்களிக்கும் ஒவ்வொரு அமெரிக்கரும், தங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை காட்ட வேண்டும். (பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்றிதழ்)
- வாக்காளர் பட்டியலை சரிபார்க்க, ஃபெடரல்(மத்திய அரசு) நிறுவனங்களுடன் மாகாணங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
- புதிய உத்தரவை அமல்படுத்தத் தவறும் மாகாணங்களுக்கு நிதி வழங்கப்படாது.
- தேர்தலில் மோசடிகள் நடப்பதாக சந்தேகங்கள் எழும்போது அது குறித்து விசாரிக்க, மத்திய அரசுடன் மாநில(மாகாண) அரசு இணைந்து செயல்பட வேண்டும்.
- அஞ்சல் மூலம் பதிவாகும் ஓட்டுகள் தேர்தலுக்கு முன்னரே வந்திருக்க வேண்டும்.
- வாஷிங்டன், விர்ஜின் தீவுகள் போன்ற 18 மாகாணங்களில், தேர்தலுக்கு பின் வரும் அஞ்சல் வாக்குகளை ஏற்கும் நடைமுறை இனி இருக்காது.
- தேர்தல் நாள் முடிவதற்குள் வாக்குப்பதிவு செய்யப்பட்டு, அது ஏற்கப்பட்டிருக்க வேண்டும்.
- தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் மென்பொருள், புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதை ஆய்வு செய்து தேர்தல் உதவிக்குழு சான்றிதழ் வழங்கும்.
- பாதுகாப்பு விதிமுறைகளுக்காக, இனி QR Code, Barcode உள்ள வாக்குச்சீட்டுகளை ஏற்கக் கூடாது.
- வெளிநாட்டவர்கள் தேர்தல் நன்கொடை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முந்தைய தேர்தல் நடைமுறைகள் குறித்து ட்ரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவை ஆட்சி செய்த முன்னாள் அரசுகள், தேர்தல் பாதுகாப்பில் பின்தங்கியதாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். 2020 அதிபர் தேர்தலில் தான் தோற்றதற்கு தேர்தல் முறைகேடுதான் காரணம் என ஏற்கனவே ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். அது முதலே, தேர்தல் நடைமுறைகள் குறித்த சந்தேகங்களை ட்ரம்ப் எழுப்பிவந்தார்.
இந்நிலையில், தற்போது புதிய மாற்றங்களை கொண்டுவரும் ட்ரம்ப், தேர்தல் பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளை பாருங்கள், அவர்கள் கறாராக இருக்கிறார்கள் என கூறியுள்ளார். அதனால், இனி அமெரிக்காவும் அந்நாடுகளின் பாதையில் பயணிக்கும், இங்கு தேர்தல் முறைகேடுகளுக்கு இடமில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

