Trump on IND-PAK War: இந்தியா ஒத்துக்கற வரைக்கும் விடமாட்டார் போலயே.! போரை நிறுத்தியதாக மீண்டும் கூறிய ட்ரம்ப்
வரிகளை முன்வைத்தே அனைத்து இடங்களிலும் அமைதியை நிலைநாட்டி சாதித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக மீண்டும் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், வரி என்ற ஒன்றை வைத்து தான் அமைதியை தான் நிலைநாட்டி வருவதாக தெரிவித்ததோடு, அதற்கு உதாரணமாக மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போரை சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
மீண்டும் இந்தியாவை வம்பிழுத்த ட்ரம்ப்
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப்பிடம், வரிகள் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எனக்கு வரிகள் விதிக்கும் அதிகாரம் இல்லையென்றால், 7 போர்களில் குறைந்தது நான்கு போர்கள் வெடித்திருக்கும்." என்று கூறினார்.
மேலும் வர்த்தக அச்சுறுத்தல்களை பயன்படுத்தி அண்டை நாடுகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்த தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆயுத மோதலின் போது அணு ஆயுதம் ஏந்திய இரண்டு அண்டை நாடுகள் ஒரு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதற்கு தனது சர்ச்சைக்குரிய வரிகளே காரணம் என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
அதோடு, இந்த வரி காரணமாகவே அமெரிக்கா ஒரு சமாதானத்தை உருவாக்குபவராக திகழ்வதாகவும், இது வாஷிங்டனுக்கு "நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை" ஈட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
"இந்தியாவையும் பாகிஸ்தானையும் பார்த்தால், அவர்கள் அதைத் தொடங்கத் தயாராக இருந்தனர். 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... நான் அவர்களிடம் சொன்னதைச் அப்படியே இங்கு சொல்ல விரும்பவில்லை, ஆனால் நான் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது... நாங்கள் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை சம்பாதித்ததோடு மட்டுமல்லாமல், வரிகளால் நாங்கள் அமைதியை காக்கும் படையினராகவும் இருக்கிறோம்." என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்தியா மறுத்த பிறகும் போரை நிறுத்தியதாக தொடர்ந்து கூறிவரும் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் இதுபோன்று கூறுவது இது முதல் முறை அல்ல. மே மாதம் 10-ம் தேதி, வாஷிங்டனின் மத்தியஸ்தத்தில் "நீண்ட இரவு" பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக ட்ரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்ததிலிருந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான பதட்டங்களை தீர்க்க உதவியதாக அவர் பலமுறை மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் மாதம், இரண்டு ஆசிய அண்டை நாடுகளுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக, வர்த்தகத்தை நிறுத்திவிடுவதாக பிரதமர் மோடியை மிரட்டியதாக டிரம்ப் கூறினார். பிரதமர் மோடியுடனான தனது "ஐந்து மணி நேர" பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் ஒரு சமாதான ஒப்பந்தத்தை எட்டியதாக ட்ரம்ப் மேலும் கூறினார்.
ஆனால், பாகிஸ்தான் ராணும், இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு, போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்ட பிறகே தாக்குதலை நிறுத்தியதாக இந்தியா கூறி வருகிறது.
மறுபுறம், பாகிஸ்தான் ஆரம்பத்தில் ட்ரம்ப்பின் கூற்றை மறுத்தாலும், பின்னர் அதை ஏற்றுக்கொண்டது. மேலும், "சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் நெருக்கடியின் போது, அவரது தீர்க்கமான ராஜதந்திர தலையீடு மற்றும் முக்கிய தலைமையை அங்கீகரிப்பதற்காக" 2026-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பாகிஸ்தான் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















