திமுகவை ரவுண்டு கட்டும் ராமதாஸ்; வெள்ளை அறிக்கை நான் வெளியிடவா? - என்ன பேசினார் ராமதாஸ்?
பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை - மருத்துவர் ராமதாஸ்

தமிழக கல்வி திட்டத்திற்கு தரவேண்டிய நிதியை குஜராத், பீகாருக்கு பகிர்ந்து அளித்துள்ளது என முதல்வர் கூறியுள்ளார். அப்படி நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. குஜராத், பீகாருக்கு நிதி வழங்கப்பட்ட தகவல்களை திரட்டி தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலையோட்டி திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை 98 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக முதல்வர், அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் பத்து சதவீதம் கூட நிறைவேற்றவில்லை என பாமக கூறி வருகிறது. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகக்கூறி மக்களை ஏமாற்ற முயற்சி செய்யக்கூடாது. 3.5 லட்சம் அரசு வேலை நிரப்பட்டும். 2 லட்சம் அரசு வேலை உருவாக்கப்படும். தனியார் வேலை வாய்ப்புகளில் 75 சதவிகிதம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒதுக்கப்படும். மாணவர்களின் கல்விக்கடம் ரத்து செய்யப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், மின் கட்டணம் மாதம் ஒருமுறை கணக்கீடு செய்யப்படும். சமையல் எரிவாயு உருளைக்கு ரூபாய் நூறு மானியம் வழங்கப்படும். சட்டப்பேரவை ஆண்டுக்கு நூறு நாட்கள் நடத்தப்படும், நேரலை செய்யப்படும் போன்ற வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானவை இவைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதி நிறைவேற்றியுள்ளது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லை என்றால் பாமக சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். ஆந்திராவில் வெற்றிகரமாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. அடுத்ததாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 13 சதவீதம் கூடுதலாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 42 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. பட்டியல் சாதியினரின் இடஒதுக்கீடு 10 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது. மொத்த இடஒதுக்கீடு 67 சதவீதமாக உயரும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உரிமை உள்ளது என தெலுங்கானா அரசு நிரூபித்துள்ளது.
புதிய கல்விக்கொள்கையின் அங்கமான பி.என்.சி பள்ளிகளை திறந்து, மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்த அரசு மறுத்துவிட்டது. ரூ.2043 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. ஆனால் மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை. மேலும் குஜராத், பீகாருக்கு பகிர்ந்து அளித்துள்ளது என முதல்வர் கூறியுள்ளார். அப்படி நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். குஜராத் பீகாருக்கு நிதி வழங்கப்பட்ட தகவல்களை திரட்டி தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.
காவிரி, கோதாவரி இனைப்பு திட்டம் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடக போன்ற அரசுகளிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டும் முடியவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் 1100 டி.எம்.சி கடலில் கலக்கிறது. காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது மத்திய அரசின் கடமை. முதல்வர்கள் மாநாட்டை மத்திய அரசு கூட்ட வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 39,393 கள பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இரு ஆண்டுகளாக காலி பணியிடகள் நிரப்பப்படாமல் உள்ளது. மக்களுக்கு நேரடியாக பணியாற்றும் மின் துறையில் இவ்வளவு பணியிடங்கள் காலியாக இருப்பதை ஏற்க முடியாது. மின் வாரியத்தின் செயல்திறனை கடுமையாக பாதித்துள்ளது.
தற்காலிக ஊழியர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் போது இழப்பீடு வழங்கப்படுவதில்லை. மின் வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் காவலர் பதவி உயர்வு குறித்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றவில்லை. இதனால் மனசோர்வு ஏற்பட்டு காவல் பணியை பாதிக்கும். அடுத்த நிதிநிலை அறிக்கையின் போது அறிவிப்பு வெளியிட வேண்டும்.
பெரியாரை கொச்சப்படுத்தும் வகையில் பேசுவதை கண்டிக்கிறேன். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கான நிதியை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றார்.

