வெளிநாட்டு வேலைக்கு செல்பவரா நீங்கள்? முக்கிய அறிவிப்பு - தவறினால் சிக்கல் நிச்சயம்!
வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம்: வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய eMigrate இணையதளத்தில் பதிவு செய்யப்பட் அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்புவோர்க்கு முக்கிய அறிவிப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடிச் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அதிமுக்கியத்துவம் வாய்ந்த அறிவுரைகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல்ரகுமான் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் நபர்கள் குறுக்கு வழிகளைத் தவிர்த்து, அரசு அமைத்துள்ள சட்டப்பூர்வமான வழியில் செல்லும்போதுதான் பாதுகாப்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும்.
உறுதி செய்துகொள்வது அவசியம்
வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய eMigrate (https://emigrate.gov.in) இணையதளத்தில் பதிவு செய்யப்பட் அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். எந்த நிறுவனத்தில் / முதலாளியிடம் வேலை செய்ய இருக்கிறீர்கள் போன்ற தகவல்களையும் முன்னதாக உறுதி செய்துகொள்வது அவசியமாகும்.
வேலைக்கான ஒப்பந்தம், விசா, மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும். வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள். உரிமைகள். பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம்பெறுகின்றன.
வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள். கலாச்சாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பல நாடுகளில் வேலைக்கு செல்லும் நபர் நாடு திரும்புவதற்கு வெளிச்செல் அனுமதி (Exit Permit) பெறுவது அவசியமாகும். ஒப்பந்த காலத்தில் வேலைக்கு சென்ற நிறுவனம் / முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்திற்கோ. முதலாளிக்கோ மாற்றம் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
போலி முகவர்கள் மூலம் வேலைக்கு செல்ல கூடாது
அதே நேரத்தில், பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வேலைக்கு செல்லும் நோக்கத்தில் வெளிநாடு பயணிக்கக்கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது. அந்நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும். இது கைது. அபராதம், அல்லது சிறை தண்டனைக்கே இட்டுசெல்லும்.
வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி மையத்தினை தொடர்பு கொள்ளவும்:
இந்தியாவிலிருந்து அழைப்புக்கு :1800 309 3793
வெளிநாடுகளில் இருந்து : 080 6900 9900 (Missed Call): 080 6900 9901
மின்னஞ்சல்: nrtchennai@gmail.com/nrtchennai@tn.gov.in
வலைத்தளம் : https://nrtamils.tn.gov.in
எனவே, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் நபர்கள், அரசு வழங்கும் வழிகாட்டுதலினை பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.





















