பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு
பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தார்
![பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு Former prime minister rajiv gandhi assassination convict perarivalan parole extended for another 30 days . பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/28/231f3d068bac377964b826f35769c1a2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு , தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் போராளிகள் என அடையாளம் காணப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் , நளினி உள்ளிட்ட 26 நபர்கள் தான் இந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என குற்றம்சாட்டி இந்த 26 குற்றவாளிகளுக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றவேண்டும் என்ற தீர்ப்பை ஜனவரி மாதம் 1998-ஆம் ஆண்டில் வழங்கியது .
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் என்று கருதப்பட்ட 26 நபர்களும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 1999-ஆம் வருடம் , மே மாதத்தில் , மேல்முறையீடு செய்ததில் , சாந்தன், முருகன் பேரறிவாளன், நளினி ஆகிய நான்குபேருக்கு மட்டும் தூக்குத்தண்டனையை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம் , மீதம் இருக்கும் 22 குற்றாவாளிகளில் 19 நபர்களை விடுதலைசெய்து, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
பலதரப்பட்ட முயற்சிகளுக்கு பின்பு நளினியின் தூக்குத்தண்டனை, அப்பொழுதைய முதல்வராக இருந்த கருணாநிதியின் முயற்சியால் 2000-ஆம் ஆண்டில் ஆயுள் தண்டையாக குறைக்கப்பட்டது. எஞ்சியிருந்த பேரறிவாளன் , சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனை 2014-ஆம் ஆண்டு ஆயுள் தண்டையாக மாற்றம் செய்யப்பட்டது .
தமிழகத்திலுள்ள பல்வேறு சிறைகளில் , கடந்த 30 வருடத்திற்கும் மேலாக சிறை வாசம் அனுபவித்து வரும் இந்த எழுவரும் விடுதலையை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர் .
இந்த நிலையில் சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அறிவு (எ) பேரறிவாளனுக்கு (49 ) சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளதால் , அவருக்கு 30 நாட்கள் பொது விடுப்பு வழங்கவேண்டும் என்று அவரது தாய் அற்புதம் அம்மாள் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மனு அனுப்பியிருந்தார். அற்புதம் அம்மாள் மனுவை பரிசீலித்த முதல்வர் மே மாதம் 16-ஆம் தேதி, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பொது விடுப்பு அளிக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் ,கடந்த மே மாதம் 28 ஆம் தேதி , பரோலில் அழைத்து வரப்பட்ட பேரறிவாளனுக்கு , வீட்டில் இருந்தபபிடியே சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றது.
30 ஆண்டுகளின் தனிமை சிறைவாசம் தந்துவிட்ட மன அழுத்தம், அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, முடக்குவாதம், வயிற்று கோளாறு என தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பது பேராபத்து என சிறை அரசு மருத்துவர் அளித்த ஆலோசனை
— Arputham Ammal (@ArputhamAmmal) June 28, 2021
(1/2)
பேரறிவாளனின் உடல்சார்ந்த பிரச்சனைகளுக்கு மேலும் சில சிகிச்சைகள் தர வேண்டியுள்ளதால் , ஜூன் மாதம் 28 ஆம் தேதியோடு முடிவடையும் அவரது பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கோரிக்கையை வைத்திருந்தார் .
ஏற்று வீட்டிலிருந்தபடி தொடர் மருத்துவம் பெற விடுப்பு வழங்கப்பட்டு தற்போதுதான் மருத்துவம் தொடங்கி உள்ள சூழலில் அது தடைபடாமல் தொடர்ந்திடும் வகையில் அறிவுக்கு விடுப்பு நீட்டிப்பினை கனிவுடன் வழங்கிய மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
— Arputham Ammal (@ArputhamAmmal) June 28, 2021
🙏🏻
(2/2)
சிறைத்துறை அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், ஜூன் மாதம் 28-ம் தேதி புழல் சிறைக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றுகொண்டு இருக்கும்பொழுது , அற்புதம்மாள் கோரிக்கை ஏற்கப்பட்டு பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது . இதனால் பாதி வழியிலேயே மீண்டும் பேரறிவாளன் ஜோலார்பேட்டை வீட்டிற்கு திரும்பினார்.
2-வது முறையாக பரோல் நீட்டிப்பு .
இந்நிலையில், ஜூலை 28-ம் தேதி (இன்றுடன் ) பேரறிவாளன் பரோல் முடிவடைதால் , அவரை சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை சிறை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே, பேரறிவாளன் ரத்தஅழுத்தம் , முடக்குவாதம் , வயிற்றுக்கோளாறு , சிறுநீரக தோற்று , உள்ளிட்ட உடல் சார்ந்த கோளாறுகளுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு மீண்டும் விடுத்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு தமிழக அரசு அறிவித்தது.
ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் பரோல் காலத்தில் , ஏற்கனவே அமுலில் இருக்கும் விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என்று தமிழ்நாடு சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது . இதனால் வீட்டில் இருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)