உலகப் போரின் நிழல்... முடங்கும் திருச்சியின் ஐடி (IT) நிழல்!
வளைகுடா நாடுகளையும், அமெரிக்காவையும் நம்பியிருந்த திருச்சியின் உள்ளூர் ஐடி நிறுவனங்கள், சர்வதேசச் சூறாவளியில் சிக்கிய சிறு தோணிகளாய் தத்தளிக்கும் அவல நிலை

திருச்சி: எங்கோ மேற்கு ஆசியாவில் எரியும் போர்க் கணைகள், இதோ திருச்சியின் மன்னார்புரத்திலும், தில்லை நகரிலும் இருக்கும் கணினித் திரைகளை இருளடையச் செய்து கொண்டிருக்கின்றன.
புவிசார் அரசியல் பதற்றமும், எகிறிப் பாயும் அமெரிக்க டாலரின் மதிப்பும், திருச்சியில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப (IT) மற்றும் ஐடி சார்ந்த சேவைகள் (ITES) வழங்கும் நடுத்தர நிறுவனங்களின் வாழ்வாதாரத்தை அடியோடு உலுக்கத் தொடங்கியுள்ளன.
வளைகுடா நாடுகளையும், அமெரிக்காவையும் நம்பியிருந்த திருச்சியின் உள்ளூர் ஐடி நிறுவனங்கள், சர்வதேசச் சூறாவளியில் சிக்கிய சிறு தோணிகளாய் தத்தளிக்கும் அவல நிலையை விவரிக்கிறது இந்தச் சிறப்புச் செய்தித் தொகுப்பு:
தள்ளிப்போகும் திட்டங்கள்... தடுமாறும் சம்பள பட்ஜெட்டுகள்!
திருச்சி மாநகரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக, இணையதள வடிவமைப்பு மற்றும் இ-காமர்ஸ் சேவைகளை வழங்கி வரும் நடுத்தர நிறுவனங்கள் பல உள்ளன. திருச்சி ஐடி அசோசியேஷன் (Trichy IT Association) பகிர்ந்துள்ள தகவல்கள், சர்வதேச நெருக்கடியின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இதுகுறித்து திருச்சியில் ஐடி நிறுவனம் தொடங்கியுள்ளவர்கள் தரப்பில் கூறுகையில், பணியாளர் செலவுகளைக் குறைக்கலாம் என்றுதான் திருச்சியில் இந்தியப் பிரிவைத் தொடங்கினோம். மார்ச் மாதத்தில் துபாயில் கையெழுத்தான பிரம்மாண்ட ஒப்பந்தம், போர்ச் சூழலால் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திறமையான பணியாளர்களை இழக்கக் கூடாது என்பதால், அவர்களைத் தற்காலிகமாக இந்தியத் திட்டங்களுக்கு மாற்றியுள்ளோம். இது எங்களின் நீண்ட காலச் சம்பள பட்ஜெட்டைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றனர்.
எகிறும் சர்வர் கட்டணம்... எங்கே போகும் லாபம்?
வெளிநாட்டு டிஜிட்டல் உள்கட்டமைப்புகளையும், சர்வர்களையும் நம்பியிருப்பது திருச்சி நிறுவனங்களின் கழுத்தை நெரிக்கும் கயிறாக மாறியுள்ளது.
₹50,000 கட்டணம் இன்று ₹1.5 லட்சம்!
டாலரின் மதிப்பு உயர்ந்ததால், முன்பு ₹50,000 ஆக இருந்த ஒரு சர்வரின் வாடகை, இன்று ₹1.5 லட்சமாக மும்மடங்கு உயர்ந்துள்ளதாகக் குமுறுகின்றனர் ஐ.டி. நிறுவனத்தினர்.
முதலீட்டுப் பற்றாக்குறை: உள்நாட்டிலேயே தரவு மையங்களை (Data Centers) உருவாக்கப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு தேவை. ஆனால், திருச்சி பிராந்தியத்தில் அந்த அளவிற்குப் பெரிய முதலீடுகளை ஆதரிக்கும் சூழல் இன்னும் உருவாகவில்லை.
முடங்கிய கட்டுமானமும்... போலி மென்பொருட்களின் ஆதிக்கமும்!
சர்வதேச அளவில் சிவில் இன்ஜினியரிங் சார்ந்த ஐடிஇஎஸ் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் இந்த நெருக்கடியிலிருந்து தப்பவில்லை.
வராத நிலுவைத் தொகைகள்: மேற்கு ஆசியாவில் பெரிய கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளதால், வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேண்டிய பணப் பட்டுவாடாக்கள் மிகக் கடுமையாகத் தாமதமாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
விலை குறைப்புப் போட்டி:
சந்தையின் இந்த நெருக்கடியைத் தாங்க முடியாமல், சில நிறுவனங்கள் செலவைக் குறைக்கப் போலி மென்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதனால், நேர்மையாக உரிமம் பெற்றுப் பயன்படுத்தும் நிறுவனங்கள், போட்டியைச் சமாளிக்கக் கடுமையான விலைக்குறைப்பைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
தொடரும் திறமை வாய்ந்த ஊழியர்களின் இடப்பெயர்வு!
சந்தையின் சவால்கள் ஒருபுறமிருக்க, உள்ளூர் மனிதவளப் பற்றாக்குறை திருச்சியின் ஐடி துறையை மற்றொருபுறம் வாட்டுகிறது.
திருச்சியில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஐடி பட்டதாரிகளை உருவாக்கினாலும், அவர்கள் அதிகச் சம்பளம் தேடி சென்னை, பெங்களூருக்கே ஓடுகிறார்கள். கல்லூரிகளில் புரோகிராமிங் மொழிகள் இருந்தாலும், மாணவர்களுக்குப் போதிய நடைமுறைப் பயிற்சி இல்லை. பேராசிரியர்களின் தகுதிகளும் தற்போதைய சந்தை மாற்றத்திற்கு ஏற்ப புதுப்பிக்கப்பட வேண்டும்."
தொழில்முனைவோரின் அவசரக் கோரிக்கைகள்
சர்வதேசப் புயலில் சிக்கியுள்ள திருச்சியின் ஐடி துறையை மீட்டெடுக்க, உள்ளூர் தொழில்முனைவோர் அரசுக்கு இரு முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்:
அரசு கூட்டுப் பணி இடங்கள்:
ஆரம்பக்கட்ட மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உள்கட்டமைப்புச் செலவைக் குறைக்க, குறைந்த வாடகையில் அரசு சார்பில் நவீன கூட்டுப் பணி இடங்களை உருவாக்க வேண்டும்.
சிறப்புத் தொழில் தொகுப்புத் திட்டங்கள்:
உள்ளூர் வேலைவாய்ப்புகளையும், நிறுவனங்களையும் பாதுகாக்கும் வகையில் பிரத்தியேக தொழில் தொகுப்புகளை ஏற்படுத்தி, மானிய விலையில் மென்பொருள் மற்றும் மின்சார வசதிகளை வழங்க வேண்டும்.
தொழில்முனைவோர் குமுறல்
உலகளாவிய சவால்கள் திருச்சியின் தொழில்நுட்பத் துறையில் ஒரு தற்காலிகத் தொய்வை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால், கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட இடைவெளியையும், உள்கட்டமைப்புக் குறைபாடுகளையும் அரசும் தனியாரும் இணைந்து சரிசெய்யாவிட்டால், திருச்சியின் ஐடி கனவு என்பது வெறும் தாள்களோடு மட்டுமே முடிந்துவிடும்!
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
ட்ரெண்டிங் செய்திகள்






















