எம்.ஜி.ஆரின் கனவு... முதலமைச்சர் விஜய்யின் முடிவென்ன? திருச்சியை 2-வது தலைநகராக்க வலுக்கும் குரல்கள்!
திருச்சியில் ஏற்கனவே புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களும், தொழிற்துறைகளும் வலுவாகக் கால்ஊன்றியுள்ளன.

திருச்சி: திருச்சியை 2-வது தலைநகராக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யிடம் திருச்சி மதிமுக எம்.பி., துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டம் மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமடைந்துள்ளது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
திருச்சியைத் தமிழ்நாட்டின் 2-வது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மிக முக்கியக் கனவுத் திட்டமாக இருந்தது. இருப்பினும், பல்வேறு சமூக அரசியல் காரணங்களினால் இத்திட்டம் அப்போது செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. இந்நிலையில், இந்தக் கோரிக்கை தற்போது தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பலமாக எழத் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, திருச்சியைத் தமிழ்நாட்டின் 2-வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கை மனுவை அளித்துள்ளார். திருச்சியைத் தலைநகரமாக அறிவித்தால் ஏற்படும் மாற்றங்கள், அதன் பயன்கள் மற்றும் அதற்கான புவியியல் காரணங்கள் பற்றி தெரியுங்களா?

சென்னையின் நூற்றாண்டு காலப் பின்னணி
தமிழ்நாட்டின் தலைநகரமாகச் சென்னை மாவட்டம் பல நூற்றாண்டுகளாக விளங்கி வருகிறது. கடந்த 1639-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சென்னையில் குடியேறிய பிறகு, அது அவர்களின் மிக முக்கிய வணிக மற்றும் நிர்வாக மையமாக வளர்ச்சி பெற்றது.
சுதந்திரத்திற்குப் பிறகும், அனைத்து முக்கிய அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் சென்னையிலேயே குவிந்தன. அதுமட்டுமல்லாமல், சென்னை கடற்கரை நகரமாக இருப்பதால் சர்வதேச வர்த்தகம், தொழில் வளர்ச்சி மற்றும் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்டதாக விளங்கியது. இவை அனைத்துமே சென்னை தொடர்ந்து தலைநகராக நீடிப்பதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.
2-வது தலைநகரால் நிர்வாகப் பரவலாக்கல் மற்றும் பயன்கள்
திருச்சி 2-வது தலைநகராக அறிவிக்கப்பட்டால், சில முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகள் செயல்படத் தொடங்க வாய்ப்புள்ளது. குறிப்பாகச் சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஒரு பகுதி அல்லது சில முக்கிய அரசுத் துறை நடவடிக்கைகள் திருச்சியில் நடத்தப்படலாம்.
மக்களுக்கான எளிதான சேவை: மாநிலத்தின் தென் மற்றும் மத்திய மாவட்ட மக்கள் தங்களின் அரசு சார்ந்த தேவைகளுக்காகச் சென்னைக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவசியம் குறையும்.
சென்னைக்குக் குறையும் சுமை
சென்னையில் தற்போது மக்கள் தொகை அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசல் மற்றும் நிர்வாக அழுத்தம் போன்ற பிரச்சினைகள் உச்சத்தில் உள்ளன. நிர்வாகப் பொறுப்புகள் திருச்சிக்கு பகிரப்பட்டால், சென்னையின் மீதான இந்த அழுத்தம் ஓரளவு குறையக்கூடும். அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து சுமையும் வெகுவாகக் குறையும்.
தென் மாவட்டங்களின் பொருளாதார எழுச்சி
திருச்சி 2-வது தலைநகராக மாறினால், மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம் சுற்றியுள்ள பல மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஓங்கும். புதிய அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் சேவைத் துறைகள் இங்கு உருவாகும். இது உள்ளூர் இளைஞர்களுக்குப் பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்.
திருச்சியை முன்மொழிவதற்கான 5 முக்கியக் காரணங்கள்
தமிழகத்தின் புவியியல் மையம்: மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் திருச்சியைத் தலைநகராக முன்மொழிவதற்கான மிக முக்கியக் காரணம், அது தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளதுதான். இதனால், மாநிலத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய நான்கு எல்லைப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல முடியும்.
சமச்சீரான வளர்ச்சி: திருச்சி மையமாக அமையும் போது எந்தவொரு பகுதியும் புறக்கணிக்கப்படாமல், அனைத்துப் பகுதிகளுக்கும் அரசுச் சேவைகளும் திட்டங்களும் சமமாகச் சென்றடையும்.
உள்கட்டமைப்பு வசதிகள்: சென்னையுடன் ஒப்பிடும்போது திருச்சியில் மக்கள் நெரிசல் குறைவு. புதிய அரசு வளாகங்கள், நவீன நிர்வாகக் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைப் புதிய தொழில்நுட்பத்துடன் விரிவுபடுத்த இங்குப் போதுமான இடவசதி உள்ளது.
இயற்கைப் பேரிடர் பாதுகாப்பு: சென்னை கடலோர நகரமாக இருப்பதால் வெள்ளம், புயல் மற்றும் கடல் சீற்றம் போன்ற பேரிடர்களை அடிக்கடி எதிர்கொள்கிறது. ஆனால், திருச்சி உள்நாட்டுப் பகுதியில் அமைந்துள்ளதால் கடல்சார்ந்த பேரிடர்களின் தாக்கம் இங்கு மிகக் குறைவு.
வரலாற்று மற்றும் கல்விப் பின்னணி: திருச்சியில் ஏற்கனவே புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களும், தொழிற்துறைகளும் வலுவாகக் கால்ஊன்றியுள்ளன. மேலும், வரலாற்று ரீதியாகச் சோழர், பாண்டியர் மற்றும் நாயக்கர் காலங்களிலேயே திருச்சி ஒரு முக்கிய நிர்வாக மையமாகத் திகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பு: வான்வழி, ரயில் வழி மற்றும் சாலை வழிகளில் சிறந்த இணைப்பைக் கொண்டுள்ள திருச்சி, தமிழ்நாட்டின் 2-வது தலைநகராவதற்கு அனைத்துத் தகுதிகளையும் கொண்டுள்ளது. எம்.ஜி.ஆர் காலம் தொட்டு பேசப்பட்டு வரும் இந்தத் திட்டத்திற்கு, தற்போதைய புதிய அரசியல் சூழலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு வடிவம் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















