![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை வரை 80 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கப்பட்ட ரயில் சேவை
குலசேகரபட்டினம் இலகு ரயில் வழித்தடத்தை அரசுடமையாக்காமல் விட்டு விட்டது. அரசுடமையாக்கப்பட்டிருந்தால் பொருளாதாரத்தில் பின் தங்கிய இந்த பகுதி நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும்.
![திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை வரை 80 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கப்பட்ட ரயில் சேவை The train service from Tiruchendur to Vektionvilai was started 80 years ago TNN திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை வரை 80 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கப்பட்ட ரயில் சேவை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/16/806ffd0991c26ab765aa7fa85510ebbf1660655639250175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையைத் தலைமையிடமாக கொண்ட பாரி அன் கோ நிறுவனம் குலசேகரன்பட்டினத்தில் ஒரு சர்க்கரை ஆலையைத் தொடங்கியது. குலசேகரன்பட்டினம் லைட் ரயில்வே (கே.எல்.ஆர்) என்ற பெயரில் இந்த ஆலைக்கு சரக்கு போக்குவரத்துக்காகவும், வேலையாட்கள் வந்து செல்வதற்கெனவும் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்தரயில் பாதை சர்க்கரை ஆலையின் சொந்த பயன்பாட்டுக்காக அந்நிறுவனத்தின் சொந்த செலவிலேயே அமைக்கப்பட்டது. சர்க்கரை மூலங்களான பதநீரையும், கருப்பட்டியையும் கொண்டுவரவே இந்த ரயில் இயக்கப்பட்டது. பதநீரை கொண்டு செல்ல திசையன்விளையில் இருந்து குலசேகரப்பட்டினம் வரைக்கும் குழாய் பதித்திருந்தனர். குழாயில் பதநீரை ஊற்றினால், அது ஆலைக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும். குலசேகரப்பட்டினத்தில் இருந்த சிறிய ஆலையில் பதநீர் காய்ச்சப்பட்டு, திரவமும் இல்லாமல், திடமும் இல்லாமல், 'பானி' எனப்படும் கூழ் போன்ற பதநிலையில்தான் ரயில்களில் அவை பெரிய ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை சர்க்கரையாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானதாக வரலாறு உண்டு.
இதன் அடிப்படையில் திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வழியாக திசையன்விளைக்கும், குலசேகரப்பட்டினத்திலிருந்து உடன்குடிக்கும் தனி ரயில்பாதை என மொத்தம் 46.671 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதை அமைப்பட்டுள்ளது.அப்போது இருந்த ஆங்கிலேயே அரசு அதிகாரிகள் வற்புறுத்தலின்பேரில் பொது மக்களின் போக்குவரத்துக்காகவும் இந்தரெயில் இயக்கப்பட்டது.திசையன்விளை, இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரப்பட்டினம் சென்ட்ரல் நிலையம், குலசேகரப்பட்டினம் கே.பி.என் துறைமுகம், குலசேகரப்பட்டினம் கே.பி.என் தொழிற்சாலை, ஆலந்தலை திருச்செந்தூர், உடன்குடி போன்ற இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 1914 முதல் 1940 வரை இப்பாதையில் ரெயில் இயக்கப்பட்டதாக ரயில்வே துறை ஆவணங்களில் உள்ளது. இது தவிர பிரிவு ரயில் பாதையாக குலசேகரப்பட்டினம் சென்ட்ரல் நிலையத்திலிருந்து காட்டான்காடு, வழியாக உடன்குடிக்கும் ரயில்பாதை அமைக்கப்பட்டது.
அன்றைய காலத்தில், திசையன்விளை- திருச்செந்தூர் இடையிலான ரெயில் பயணக்கட்டணம் 13 அனாவாக இருந்தது. பயண நேரம் மூன்று மணி நேரம் ஆகும். இந்த காலகட்டங்களில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு மீட்டர் கேஜ் வழித்தடத்தில் தென் இந்திய ரயில்வே நிறுவனம் ரயில்களை இயக்கி வந்தது. இந்த வழித்தடம்தான் தற்போது அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.2-ம் உலகப் போரை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாகவும் குலசேகரபட்டினத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் காரணமாகவும் குலசேகரபட்டினம் கே.பி.என். தொழிற்சாலை அதன் உற்பத்தியை நிறுத்தி தொழிற்சாலையை மூடியது. இதைத்தொடர்ந்து இந்த ரயில் வழி திட்டத்தையும் படிப்படியாக நிறுத்துவது என நிறுவனம் முடிவெடுத்தது.
இவ்வாறு தொழிற்சாலையை மூடிய காரணத்தாலும் இந்த ரயில்வே திட்டத்தை பொறுப்பேற்று நடத்த யாரும் முன்வராத காரணத்தாலும் இந்த பகுதியில் இயக்கப்பட்ட ரயில் சேவை முற்றிலும் முடங்கிப்போனது. தற்போது இந்த பகுதியில் ரயில்கள் ஓடியதற்கான எந்த ஒரு அடையாளங்களும் இல்லை. இந்த ரயில்கள் இயக்கப்பட்ட வழி தடத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு எந்த சுவடும் இல்லாமல் அனைத்தும் அழிந்தும் விட்டது.குலசேகரபட்டினம் இலகு ரயில், தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டதால் இந்திய ரயில்வேதுறை இந்த வழித்தடத்தை அரசுடமையாக்காமல் விட்டு விட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. ஒருவேளை, அரசுடமையாக்கப்பட்டிருந்தால், பொருளாதாரத்தில் பின் தங்கிய, வறட்சி நிறைந்த இந்த பகுதி நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)