Nellai Grahambell : ‘சட்டவிரோத கனிம வள கொள்ளை?’ சர்ச்சையில் நெல்லை திமுக கிரகாம்பெல்..!
'ஏற்கனவே நெல்லை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மீது குவாரி முறைகேடு புகார் இருக்கும் நிலையில், கிராகாம்பெல்லும் அந்த குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருப்பது புதிய புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது’

ஆங்கிலேயர்கள், முகமது கஜினி போன்ற அந்நியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த நமது செல்வங்களையெல்லாம் சுரண்டி கொள்ளையடித்தார் என்று நாம் வரலாற்றில் படித்திருப்போம். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் அப்படியான சுரண்டல்கள் இந்தியாவில் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதுவும் இந்த பூமி சரியாக செயல்பட காரணமாக இருக்கும் கனிம சுரண்டல். இந்தியா என்றால் ஏதோ வடமாநிலம் என்று நினைக்க வேண்டாம். நமது தமிழ்நாட்டிலும் பல்வேறு பகுதிகளில் அப்படியான கனிம சுரண்டல், கொள்ளை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
அறப்போர் இயக்கம் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்
சமீபத்தில் அப்படியான ஒரு கனிம கொள்ளை குறித்து அறப்போர் இயக்கம் விவரமாக வெளியிட்டிருந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில்தான் இந்த கனிமங்கள் சட்டவிரோதமாக சுரண்டி எடுக்கப்படுவதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட பல்லாயிரம் மடங்கு கனிமங்கள் வெட்டிக் எடுக்கப்பட்டு அரசுக்கு பல கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படுத்துவதாகவும் பகீர் குற்றச்சாட்டை அந்த இயக்கம் முன் வைத்திருந்தது.
திருநெல்வேலியில் எதற்காக சட்டவிரோத குவாரி மாபியா கும்பல் அறப்போர் இயக்கத்தினரையும் Dr சுரேஷ் அவர்களையும் தாக்கினார்கள்? அதன் பின் அவர்கள் செய்யும் மாபெரும் ஊழல் என்ன ? அறப்போர் கடந்த ஆண்டு வெளிக்கொண்டு வந்த ஆதாரங்கள் இதோ. இதன் மீது முதல்வர் @mkstalin ஒரு FIR கூட பதிவு செய்து… pic.twitter.com/OWxhRRsjt0
— Arappor Iyakkam (@Arappor) November 12, 2025
நெல்லை திமுகவில் புகைச்சல்
இந்த நிலையில்தான், நெல்லை திமுகவில் இந்த கனிம கொள்ளை விவகாரம் கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல் பெரிய பிரச்னையாக வெடித்து வருகிறது. அப்படி என்ன விஷயம் என நெல்லை மாவட்ட உடன்பிறப்புகளிடம் விசாரித்தோம். அவர்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் பகீர் ரகம்.
திமுக மாவட்ட செயலாளர் கிரகாம்பெல்லுக்கு சிக்கல்?
தற்போது நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருப்பவர் கிரகாம்பெல். இவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காற்றாலைகள், குவாரிகள், பெட்ரோல் பங்குகள், உள்ளிட்ட என பல தொழில்களை செய்து வரும் தொழிலதிபராகவும் இருக்கிறார். இவர் மீதுதான் இந்த கனிம வள கொள்ளை குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறது அறப்போர் இயக்கம்.
சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்குமா ?
இது நெல்லை திமுகவில் புதிய புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் கிரகாம்பெல், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக தலைமையிடம் சீட் கேட்டு காய்நகர்த்தி வரும் நிலையில், அவர் மீது கனிம வள கொள்ளை என்ற பெரும் குற்றச்சாட்டு எழுந்திருப்பதால், அவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று உட்கட்சியை சேர்ந்த சிலரே திமுக தலைமைக்கு ரகசியமாக, அதே நேரத்தில் ஆதாரங்களோடு கடிதங்களை எழுதியிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், இந்த முறை தனக்கு நிச்சயம் தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் கிரகாம்பெல்லுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டியிருக்கிறது.
அதே மாதிரி தலைமை செயலக முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய டீம் ஒன்று, குவாரி விஷயத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியரை திமுகவினர் நடத்திய விதம் குறித்தும் முதல்வரிடம் முறையிட முடிவு செய்திருக்கின்றனர். அதில் கிராம்பெல்லின் பெயரும் முன்னிலையில் இருப்பதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த கிரகாம்பெல்
சாதாரண உடற்கல்வி ஆசிரியராக தன்னுடைய பணியை தொடங்கிய கிரகாம்பெல்தான் இன்று நெல்லை திமுகவின் கிங் மேக்கர். பல வருடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் தற்போது திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியை பல போராட்டங்களுக்கு பிறகு அவர் பெற்றிருக்கிறார்.
காற்றாலை நிறுவனங்களின் ஓனர்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆரம்பகாலக் கட்டத்தில் காற்றாலை நிறுவனங்கள் அதன் ஆலைகளை அமைக்க திட்டமிட்டபோது அவர்களோடு சேர்ந்து இடம் தேர்வு செய்து கொடுப்பது உள்ளிட்ட விவகாரங்களில் ஈடுபட்டவருக்கு இன்று சொந்தமாக பல காற்றாலைகள் உள்ளன. அதே மாதிரி, நெல்லை, தூத்துக்குடி பகுதியில் இந்தியாவின் பிரபலமான Hindustan Unilever நிறுவனத்தின் பொருட்களின் மொத்த டீலரே இவரது குடும்பத்தினர்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதுமட்டுமின்றி, இன்னும் பல்வேறு தொழில்களை செய்து வரும் கிரகாம்பெல்லின் இந்த அசுர வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் குவாரிகள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் குவாரி உள்ளிட்ட தொழில்கள் அனைத்தும் கிராம்பெல் செல்வாக்கினால் நடக்கிறது என்பதும் அறப்போர் இயக்க குற்றச்சாட்டு.
குவாரிகள் மூலம் வளர்ந்த கிரகாம்பெல்
குவாரிகளில் மூலம் வந்த வருமானத்தை வைத்தே ஒரு சாம்ராஜ்ஜியத்தை கட்டியிருக்கும் கிராகாம்பெல், அந்த குவாரிகளில் விதிகளை மீறி சட்டவிரோதமாக, அளவுக்கு அதிகமாக கனிமங்களை வெட்டி எடுத்து கொள்ளையடித்து வருகிறார் என்ற அறப்போர் இயக்க குற்றச்சாட்டுதான் தற்போதைய நெல்லை திமுகவின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.
நூதன முறையில் தண்ணீர் திருட்டு ?
இதுமட்டுமின்றி, அனுமன் நதியால் பயன் பெறும் தனக்கர்குளம் பஞ்சாயத்து வீசாடிகுளம், கீநேரி குளம், பெரியபத்து குளம் ஆகிய குளங்கள் கடந்த 5 வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் அக்டோபர் 25 ம் தேதி பெய்த மழையில் அனுமன் நதியில் தண்ணீர் பெருங்குடி அணைகட்டு வழியாக வீசாடி குளத்திற்கு வந்த போது, அந்த தண்ணீரை பொதுப்பணி துறையின் விதிமுறையை மீறி கால்வாய் அமைத்,து பெருங்குடி அணைகட்டிற்கு கிழக்கு பக்கம் அமைந்துள்ள கிராகம்பெல்லுக்கு சொந்தமான SAV கல்குவாரிக்குள் திருப்பி விடப்பட்டு நூதன முறையில் தண்ணீர் திருடப்பட்டது என்ற புதிய புகாரையும் அவர் மீது மக்கள் எழுப்பியுள்ளனர்.
ஆயிரம் ஏக்கர் நிலம்
மேலும், வடக்கன்குளம் அருகே ஆயிரம் ஏக்கர் நிலத்தை கிராம்பெல் சமீபத்தில் வாங்கிருப்பதாகவும் அதிலுமே பல வில்லங்கம் இருப்பதாகவும் சொல்லும் அப்பகுதி மக்கள், இப்படியான கனிம வள கொள்ளை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். கிராகாம்பெல் வாங்கியிருப்பதாக கூறப்படும் நிலங்கள் குறித்தும் அறப்போர் இயக்கம் ஆய்வு செய்து வருகிறது.
நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர் ?
கனிம வளங்கள் கொள்ளையடிப்பதற்கு எதிராக கடந்த அதிமுக ஆட்சியில் கடுமையான கண்டனங்களைம் போராட்டத்தையும் முன்னெடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில், அதுவும் திமுக நிர்வாகிகளே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அப்படியில்லாத நிலையில், இது தேர்தல் நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் தோற்றால் பதவி பறிப்பு – எச்சரித்த முதல்வர்
சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒன் – டு – ஒன் நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அத்தனை தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும், அப்படியில்லை எனில் தயவு தாட்சயண்யம் இன்றி பதவி பறிக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார். தேர்தல் நடப்பதற்கு முன்னர் இப்படியான விஷயங்களை உளவுத்துறை மூலம் கண்டறிந்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நெல்லை, திமுக கோட்டையாக மாறும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்
சாட்டையை சுழற்றுவாரா முதல்வர் ?
குறிப்பாக, ஊழல், கட்டப்பஞ்சாயத்து என்பது அறவே திமுகவில் இருக்கக் கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டு, அப்படியான வேலைகளில் ஈடுபடும் நிர்வாகிகளின் பட்டியலை கேட்டிருக்கும் நிலையில், அது தொடர்பான பட்டியலையும் திமுகவிற்காக பணியாற்றும் நிறுவனம் ஒன்று தயாரித்து வருகிறது. நெல்லையை பொறுத்தவரை ஏற்கனவே சில நிர்வாகிகள் மீது இதேபோன்றதொரு புகார்கள் இருந்து வரும் நிலையில், நெல்லை மாவட்ட பொறுப்பாளரான கிராகம்பெல்லும் அதே குவாரி முறைகேடு புகாரில் சிக்கியுள்ளதாக அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய நிலையில், அவருக்கு எம்.எல்.ஏ சீட் கிடைப்பது என்பது தற்போது குதிரைகொம்பாக மாறியிருக்கிறது.
தன்னுடைய முகநூலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தோடு அவரது முழக்கமான ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற வார்த்தையையும் சேர்த்து வைத்திருக்கும் கிரகாம்பெல்லின் இப்படியான செயல்பாடுகளால் நெல்லையில் திமுக தலைகுனிந்துவிடக் கூடாது என்றால், முதல்வர் இந்த அறப்போர் குற்றச்சாட்டில் உடனடியாக தலையிட வேண்டியது அவசியம் என்கிறார்கள் நெல்லை மாவட்ட உடன்பிறப்புகள்.






















