![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
நெல்லையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம் - தாமிரபரணி படுகையில் 2 நாட்கள் நடைபெறுகிறது
’’கடந்த ஆண்டு கணக்கெடுப்பை விட இந்த ஆண்டு குளங்கள் பெரும்பாலும் பெருகி உள்ளதால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு’’
![நெல்லையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம் - தாமிரபரணி படுகையில் 2 நாட்கள் நடைபெறுகிறது Initiation of bird census in Nellai, It is to be held for 2 days while the Thamiraparani River is flowing நெல்லையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம் - தாமிரபரணி படுகையில் 2 நாட்கள் நடைபெறுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/c26b34b1086fc9185baccb9c7334d9c5_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நீராதாரமாக திகழ்ந்து வரும் தாமிரபரணி நதியின் மூலம் பயன்பெறும் பாசன குளங்களில் இனப்பெருக்கத்திற்காக வந்திருக்கும் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அகத்திய மலை சமூகம் சார்ந்த சூழலியல் அமைப்பு மற்றும் வனத்துறை, நம் தாமிரபரணி இயக்கம் சார்பில் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதி கால்வாய் பாசன குளங்களில் வசிக்கும் பறவைகள் கணக்கெடுப்பு இன்று முதல் தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
12 வது தாமிரபரணி நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் என 90 பேர் பங்கேற்று 10 குழுக்களாக பிரிந்து பறவைகளை இனம் மற்றும் ரகம் வாரியாக அவைகளை நேரில் காண்பது, அவற்றின் எச்சம், கால்தடம், கூடுகள், ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுத்து வருகின்றனர். அதன்படி முதலாவது குளமாக நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வேய்ந்தன் குளத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு பறவைகள் தொலைநோக்கி உள்ளிட்ட நவீன கருவிகள் மூலம் கண்டு கணக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து கங்கைகொண்டான் பெரியகுளம் , ராஜவல்லிபுரம் குளம், நயினார்குளம், மானூர் பெரியகுளம், அரியநாயகிபுரம் குளம், திருப்புடைமருதூர் உள்ளிட்ட நெல்லை மாவட்டங்களில் 14 குளங்களில் இன்றும், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளையும் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தாமிரபரணி நீர்வாழ் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கூறுகையில், 12 வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு இன்று துவங்கி உள்ளது, 10 குழுக்களாக பிரிந்து 30 குளங்களில் இன்று கணக்கெடுப்பு துவங்கி உள்ளது, நாளை 30 குளங்களில் நடைபெற உள்ளது, வடகிழக்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக அளவில் பெய்துள்ளதால் தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டிய பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளன. கடந்த ஆண்டு கணக்கெடுப்பை விட இந்த ஆண்டு குளங்கள் பெரும்பாலும் பெருகி உள்ளதால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதில் குறிப்பாக நாமக்கோழி, மூக்கன் தாரா, சிவப்பு ஆள்காட்டிக் குருவி, ஜம்பு நாரை, கூழைக்கடா, பவளக்கால் உள்ளான் ஆகிய 36 வகை பறவைகள் தாமிரபரணி பாசன குளங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 60 குளங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார். கடந்த வருடம் 25 ஆயிரம் பறவைகள் பார்க்க முடிந்தது, மேலும் அனைத்து குளங்களிலும் தண்ணீர் அதிகமாக இருப்பதால் பறவைகள் ஓரிடம் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் பரவி காணப்படுவதால் கூட்டமாக காணப்படுவது குறைவு எனவும் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)