தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
தஞ்சை பெரிய கோயிலுக்கு யானை இல்லை என்பது இங்கு வருபவர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலின் பெருமைக்கு புதிய அடையாளமாக கொடையாளர்கள் யாராவது யானை வழங்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயடிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்காக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். உலக பிரசித்தி பெற்றது தஞ்சை பெரிய கோயில் ஆகும். இந்த கோயிலுக்கு தஞ்சை மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.. மேலும் தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷம், சோமவாரம், அன்னாபிஷேகம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய கோயிலுக்கு வருகை தருவார்கள். பல்வேறு தரப்பு மக்களும் பெரிய கோயிலுக்கு வந்து செல்கின்றனர். தனித்துவமான கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலின் முகப்பில் கேரளாந்தகன் கோபுரமும், அடுத்ததாக ராஜராஜன் கோபுரமும் உள்ளது. கேரளாந்தகன் கோபுரத்தின் முதல் தளம் தவிர மற்றவை சிறப்பான தொழில்நுட்பத்தினால் தயாரிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. இந்த கோபுரத்தின் முதல் தளத்துக்கு செல்ல இருபுறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட இந்த தஞ்சை பெரிய கோயிலுக்கு யானை இல்லை என்பது இங்கு வருபவர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் கடந்த 1960ம் ஆண்டு தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு யானையை நன்கொடையாக வழங்கினார். சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து அதன் நினைவாக 10 வயதுடைய யானையை தஞ்சை புன்னைநல்லுர் மாரியம்மன் கோயிலுக்கு நினைவாக வழங்கி அதற்கு வெள்ளையம்மாள் என பெயர் சூட்டினார்.
தொடர்ந்து 25 ஆண்டுகள் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் இருந்த யானை பக்தர்களை மகிழ்வித்தது. பின்பு 1985ம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இருந்த யானை வெள்ளையம்மாள் கடந்த 2013ம் ஆண்டு சமீபகாலமாக வலது காலில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் படுத்தப் படுக்கையாக இருந்தது. கால்நடை மருத்துவர்கள், கோயில் யானைக்கு தொடர்ந்து அளித்த சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 63 வயதான தஞ்சை பெரிய கோயில் யானை வெள்ளையம்மாள் உயிரிழந்தது.
இதையடுத்து பெரிய கோயில் வளாகத்தில் உள்ள யானை மண்டபம் பின்புரம் வெள்ளையம்மாள் நல்லடக்கம் செய்யப்பட்டது. 2013க்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலுக்கு யாரும் யானை நன்கொடையாக வாங்கி தர முன்வரவில்லை. தஞ்சை பெரிய கோயில் வரும் சுற்றுலா பயணிகள் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் யானை இல்லாதது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. எனவே யாரவது யானையை நன்கொடையாக வாங்கி தர முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசேஷ காலங்களில் புனித நீர் கொண்டு வருவது உட்பட சுவாமி ஊர்வலத்திற்கு செல்வது போன்றவற்றுக்கும் யானை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















