ஐந்தாண்டுகளில் 3 மடங்கு உயர்வு: சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகும் காவிரி டெல்டா!
வெளிநாட்டுப் பயணிகளுக்கு உகந்த உலகத்தரம் வாய்ந்த தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் ஆன்மிகப் பயணிகளுக்காக 'யாத்ரி நிவாஸ்' போன்ற மலிவுவிலை தங்குமிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

தஞ்சாவூர்: சோழர்களின் வரலாற்றுப் பெருமை மற்றும் கடற்கரை எழில் கொஞ்சும் காவிரி டெல்டா மாவட்டங்களில், கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 3 மடங்கு அதிகரித்துள்ளது. தஞ்சை முதல் தரங்கம்பாடி வரை பரவிக் கிடக்கும் இந்த சுற்றுலாத் தலங்கள், தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளைப் பெரிதும் வசீகரித்து வருகின்றன.
ஆன்மீகம் தாண்டிய பன்முக சுற்றுலா மண்டலம்
காவிரி நதியின் கொடையால் செழிக்கும் தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் வரலாற்றுச் சிறப்பு, ஆன்மிக பாரம்பரியம், பிரமாண்ட கட்டிடக்கலை மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த முக்கிய சுற்றுலா மண்டலமாக விளங்குகின்றன. ஒருகாலத்தில் ஆன்மிகச் சுற்றுலாவிற்கு மட்டுமே அறியப்பட்ட இப்பகுதி, தற்போது பன்முக சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. கொரோனா காலப் பாதிப்பில் இருந்து மீண்டு, ஆண்டுதோறும் பயணிகளின் வருகை இங்கு புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
கம்பீரம் காட்டும் சோழர் காலக் கலைப் பெருமை
டெல்டாவின் இதயமாக விளங்கும் தஞ்சை மாவட்டம், சோழர் காலக் கட்டிடக்கலையின் உலகளாவிய அடையாளமாகும். ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு, 1000 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கிறது.
தஞ்சாவூர் அரண்மனை, சரசுவதி மகால் நூலகம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், கல்லணை, மனோரா கோபுரம், சுவாமிமலை மற்றும் நவக்கிரக கோவில்களும் பயணிகளின் முக்கிய தேர்வாக உள்ளன.
கும்பகோணம் மகாமகக்குளம், பூண்டி மாதா பேராலயம் மற்றும் சுற்றியுள்ள பழமையான சிவாலயங்கள் ஆன்மீக சுற்றுலாவின் முக்கிய அடையாளங்களாகத் திகழ்கின்றன.
கடற்கரை எழிலும், மத நல்லிணக்கமும் நிறைந்த நாகை
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் மத நல்லிணக்கத்தின் அடையாளமான நாகூர் தர்கா ஆகிய திருத்தலங்களுக்குச் சாதி, மத பேதமின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். நாகப்பட்டினம் கடற்கரை மற்றும் சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடங்களாகும்.
இயற்கை ஆர்வலர்களின் புகலிடமாகும் திருவாரூர்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆன்மிகத் தளமாக விளங்கும் அதே வேளையில், இயற்கை ஆர்வலர்களைக் கவரும் பகுதிகளும் இங்கு அதிகம். குறிப்பாக, வடுவூர் மற்றும் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயங்கள், மற்றும் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் (மாங்குரோவ் காடுகள்) இயற்கை நேசர்களின் முக்கிய புகலிடமாக மாறியுள்ளன.
சங்ககால வரலாற்றை பறைசாற்றும் மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, பண்டைய துறைமுக நகரமான பூம்புகார், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் கம்பர் மணிமண்டபம் ஆகியவை தங்களின் தனித்துவமான வரலாற்றால் பயணிகளை ஈர்க்கின்றன.
புதிய சாதனை: 5 ஆண்டுகளில் 1.80 கோடி பயணிகள் வருகை!
கொரோனா பாதிப்பு இருந்த 2020-ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்திற்கு வந்த உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 62.53 லட்சமாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து, 2025-இல் 1 கோடியே 77 லட்சத்து 43 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், வெளிநாட்டுப் பயணிகளின் வருகையும் 75 ஆயிரத்தில் இருந்து 1.80 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2025-இல் ஒட்டுமொத்த பயணிகளின் வருகை 1.79 கோடியைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், நடப்பு ஆண்டில் கடந்த மாதம் வரை மட்டுமே சுமார் 82.95 லட்சம் பயணிகள் வருகை தந்துள்ளனர். நாகை மாவட்டத்திற்கும் ஆண்டுக்கு 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதால், சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்:
போக்குவரத்து மற்றும் சாலை மேம்பாடு: சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகளை அகலப்படுத்துவதோடு, அரசு மற்றும் தனியார் சொகுசு பேருந்து வசதிகளை அதிகரிக்க வேண்டும்.
தங்குமிடம் - உணவகங்கள்: வெளிநாட்டுப் பயணிகளுக்கு உகந்த உலகத்தரம் வாய்ந்த தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் ஆன்மிகப் பயணிகளுக்காக 'யாத்ரி நிவாஸ்' போன்ற மலிவுவிலை தங்குமிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
தகவல் மையங்கள்: முக்கிய மொழிகளில் வழிகாட்டிப் பலகைகள், பயிற்சி பெற்ற சுற்றுலா வழிகாட்டிகள் (Guides) மற்றும் 24 மணி நேர டிஜிட்டல் தகவல் மையங்களை உருவாக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள்: தூய்மையான கழிவறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் நவீன குப்பை மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
"காவிரி டெல்டா சுற்றுலாப் பாதை" என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் இத்தலங்களை ஒருங்கிணைத்து, சர்வதேச உள்கட்டமைப்பை உருவாக்கினால், உலக வரைபடத்தில் இம்inter மாவட்டம் முதன்மைச் சுற்றுலா மையமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
ட்ரெண்டிங் செய்திகள்






















