இந்த மழையைத்தான் எதிர்பார்த்தோம்! தஞ்சை விவசாயிகளின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
தஞ்சை, வல்லம், கள்ளப்பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் பெய்த இந்த மழை பம்ப்செட் வாயிலாக சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு ஒரு 'ஊட்டச்சத்து' போல அமைந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் இதமான சாரல் மழை விட்டு விட்டு பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இந்நிலையில் இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு வயலை தயார்படுத்தும் பணிகளில் மும்முரமாகி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, வல்லம், கல்விராயன்பேட்டை, 8ம் நம்பர் கரம்பை, சிவகாமிபுரம் உட்பட சுற்றுப் பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்தத் திடீர் மழையால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெயில் தாக்கம் அதிகம் இல்லை என்றாலும் இரவு நேரத்தில் அனல்காற்று வீசியது. இந்நிலையில் நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. ஆனால் மழை பெய்யவில்லை.
இந்நிலையில், நேற்று காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து லேசான சாரலுடன் தொடங்கிய மழை, பின்னர் மிதமான மழையாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதனால் அவ்வபோது வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் இதமான குளிர் சூழலால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சை, வல்லம், கள்ளப்பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் பெய்த இந்த மழை பம்ப்செட் வாயிலாக சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு ஒரு 'ஊட்டச்சத்து' போல அமைந்துள்ளது. இந்த மழை தற்போதுள்ள நிலத்தடி நீர் மட்டத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாகத் தென்னை மற்றும் இதர பயிர்களுக்குத் தேவையான ஈரப்பதம் இதன் மூலம் கிடைத்துள்ளது. இது நடவுப் பணிகளை மேற்கொண்டு வேகப்படுத்த ஊக்கமளிக்கிறது என்று தெரிவித்தனர்.
மழையின் காரணமாக கிராமப்பகுதிகளில் குளிர்ச்சியான காற்று வீசியது. கோடை காலத்தின் ஆரம்பக்கட்ட வெப்பத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த மழை ஒரு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
நாங்கள் ரெடி... குறுவைக்கு தயாராகும் விவசாயிகள்
கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் மழையை பயன்படுத்தி வயலை உழுது குறுவை சாகுபடி தயார் செய்யும் முனைப்பில் ஆலக்குடியில் விளைநிலங்களில் இயற்கை எருவை விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில், குறுவை சாகுபடி பணிகளுக்கான முன்னேற்பாடுகளில் விவசாயிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தஞ்சாவூர் அருகே உள்ள ஆலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்பா அறுவடைப்பணிகள் முடிந்து, மண்ணின் வளத்தைப் பெருக்கும் நோக்கில் விளைநிலங்களில் இயற்கை எருக்களைக் கொட்டி வைக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
கடந்தாண்டு தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் இலக்கை மிஞ்சி அதிக மகசூல் கிடைத்தது. தற்போது விவசாயிகள் மத்தியில் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைத்து இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். ஆலக்குடி பகுதியில் உள்ள வயல்களில் ஆங்காங்கே மாட்டு எரு மற்றும் மக்கிய கழிவுகளைக் குவியல் குவியலாகக் கொட்டி வைத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கோடை மழை பெய்துள்ள நிலையில், தற்போது வயலை பண்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. நிலத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும், மண்ணிற்குத் தேவையான தழைச்சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை வழங்கவும் இந்த இயற்கை எரு பெரிதும் உதவும். இன்னும் சில நாட்களில் இந்தப் பண்ணை எருக்களை வயல் முழுவதும் சீராகப் பரப்பி, உழவுப் பணிகளைத் தொடங்கவுள்ளோம்."
மேட்டூர் அணை திறப்பு மற்றும் பாசன நீர் வரத்தைப் பொறுத்து குறுவை சாகுபடி பரப்பளவு அமையும் என்றாலும், தற்போதுள்ள காலநிலையைச் சாதகமாக்கி முதற்கட்டப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இந்த இயற்கை உரமிடல் முறையானது மண்ணின் தரத்தை உயர்த்துவதுடன், நெற்பயிர்கள் நோய் எதிர்ப்புத் திறனுடன் வளரவும் வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தஞ்சை டெல்டா மாவட்டங்களில் பரவலாகத் தொடங்கியுள்ள இந்த விவசாயப் பணிகள், வரும் வாரங்களில் மேலும் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















